பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் மேலதிக வகுப்பு ஒன்றின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த சிறுவர்களில் பெரும்பாலானோர் 7 முதல் 11 வயதிற்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களும் அடங்குவர்.
இந்தக் கூரை இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான கட்டிடத்தின் கூரை நீண்ட நாட்களாகவே மிகவும் பலவீனமான நிலையில் இருந்துள்ளது.
ஆபத்தான முறையில், சிறுவர்கள் வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்த நேரத்திலேயே கூரையின் பழுதுபார்க்கும் பணிகள் தடையின்றி நடைபெற்று வந்துள்ளன.
கூரையின் மேல் ஏற்றப்பட்ட அதிகப்படியான பாரம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என மக்கள் சந்தேகிக்கின்றனர்.
எனினும், உத்தியோகபூர்வ விசாரணை முடிவடைந்த பின்னரே இதற்கான துல்லியமான காரணம் அறிவிக்கப்படும்.
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், காயமடைந்த சிறுவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் தடையின்றி வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, பஞ்சாப் மாநில முதலமைச்சர் மரியம் நவாஸ் ஷெரீப் கருத்துத் தெரிவிக்கையில்:
“இது நெஞ்சை உலுக்கும் ஒரு பேரவலமாகும். இந்த விபத்திற்குப் பொறுப்பான மற்றும் அலட்சியமாகச் செயல்பட்ட அனைவருக்கும் எதிராக சட்டம் மிகக் கடுமையான முறையில் பாயும்.” என்று உறுதிபடக் கூறியுள்ளார்.















