சர்வதேச சந்தையில் புதன்கிழமையன்று (07) மசகு எண்ணெய் விலைகள் கிட்டத்தட்ட 2% உயர்ந்தன.
ஈரான் மீது அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதோடு மசகு எண்ணெய் விற்பனை மீதான தடைகளையும் மீண்டும் விதித்ததைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு ஏற்பட்டது.
அதன்படி, பிரென்ட் மசகு எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு பீப்பாய்க்கு 1.38 டொலர் (1.9%) அதிகரித்து 75.54 டொலர்களாகவும், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் 0128 GMT நிலவரப்படி ஒரு பீப்பாய்க்கு 1.37 டொலர் (1.9%) அதிகரித்து 71.81 டொலராகவும் உயர்ந்தது.
ஈரானியத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானிய மசகு எண்ணெயை விற்பனை செய்ய அங்கீகாரம் அளிக்கும் பொது உரிமத்தை அமெரிக்கா இரத்து செய்ததை அடுத்து, செவ்வாயன்று இந்த இரண்டு எண்ணெய் குறியீடுகளும் சுமார் 3% உயர்ந்தன.
இந்த புதிய தாக்குதலினால் இரு தரப்புக்குமிடையிலான பலவீனமான போர்நிறுத்தம் முறியக்கூடும் என்றும் மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் விநியோகம் மீண்டும் பாதிக்கப்படலாம் என்றும் அச்சம் எழுந்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் சரக்குகளைப் பரந்த சந்தைகளுக்குக் கொண்டு செல்வதில் இந்த நீரிணை ஒரு முக்கிய நீர்வழியாகத் திகழ்கிறது.















