இலங்கை ஏற்றுமதிகள் மீதான அமெரிக்காவின் கூடுதல் சுங்கவரி 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் பேச்சுவார்த்தைக் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் எட்டப்பட்ட சாதகமான முடிவு இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில்,
அமெரிக்கா மற்றும் இலங்கை இடையிலான வலுவான இருதரப்பு உறவுகள், ஜனாதிபதியின் சரியான நேரத்திலான நடவடிக்கைகள் மற்றும் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் காரணமாக இலங்கைக்கு சாதகமான முடிவு கிடைத்துள்ளது.
இலங்கை நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழுவின் கடின உழைப்பு, தீவிரமான பேச்சுவார்த்தைகள் மற்றும் திட்டமிட்ட அணுகுமுறை இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்தக் குழுவில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வர்த்தக செயலாளர் விமலேந்திரராஜா, பிரதம பொருளாதார ஆலோசகரும் முதலீட்டு சபை (BOI) தலைவருமான துமிந்த ஹுலங்கமுவ மற்றும் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
மேலும், வொஷிங்டன் டி.சி.யில் உள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்ட தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள், தகவல் சேகரிப்பு, ஆலோசனைகள் மற்றும் நல்லுறவை கட்டியெழுப்பும் முயற்சிகளும் இந்த சாதகமான முடிவுக்கு பங்களித்தன.
தனது நீண்டகால தூதுவர் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் நிறைவடையவுள்ள நிலையில், இந்த வெற்றியில் இலங்கை எதிர்காலத்தில் அலட்சியம் காட்டக்கூடாது.
இந்த சாதகமான நிலையை தொடர்ந்து பேணுவதற்கு மேலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, நாம் தொடர்ந்தும் விழிப்புடன் செயல்பட வேண்டும் – என்றும் பதிவிட்டுள்ளார்.
கட்டாய உழைப்பு முறையைத் தடுப்பதில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அமெரிக்கா தனது இறக்குமதியில் பெரும்பகுதியை உள்ளடக்கிய சுமார் 60 வர்த்தகப் பங்காளிகள் மீது புதிய வரிகளை விதித்துள்ளது.
10% முதல் 12.5% வரை உள்ள இந்த வரிகள், இங்கிலாந்து, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஜப்பான், இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட முக்கியப் பொருளாதாரக் கூட்டாளிகளை இலக்காகக் கொண்டுள்ளன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிநாட்டுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தற்காலிக 10% வரி முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (24) முதல் இவை அமுலுக்கு வருகின்றன.













