ஜூலை 83இன் 43ஆவது ஆண்டு நினைவு. அதை கறுப்பு ஜூலை என்று பொதுவாக அழைக்கிறார்கள்.அதை இன அழிப்பு ஜூலை என்று அழைக்க வேண்டும். அது கலவரம் அல்ல. கலவரம் என்றால் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பும் தங்களுக்குள் மோதிக் கொள்வது.அங்கே அப்படிப்பட்ட மோதல் எதுவும் நடக்கவில்லை. நிராயுதபாணிகளான தமிழர்கள் மீது நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்கத்தின் அனுசரணை பெற்ற குண்டர்கள் தாக்குதல் நடத்தினார்கள். தென்னிலங்கை நகரங்களில் சந்தையை பெருமளவுக்கு தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமிழ் வணிகர்களை திட்டமிட்டு தாக்கி விரட்டிய,நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட இன அழிப்பு அது. எனவே அதனை கருப்பு ஜூலை, கலவரம்… என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.தமிழர்கள் அதனை 83 ஜூலை இன அழிப்பு என்றுதான் அழைக்க வேண்டும்.
43 ஆண்டுகளாகின்றன.தமிழர்கள் இப்பொழுதும் செம்மணியில் எலும்புக்கூடுகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.பலாலியில், மைலிட்டியில் 36 ஆண்டுகளுக்கு முன்பு தாம் இழந்த நிலத்தை மீட்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். கேப்பாபுலவில் 18 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த நிலத்தை மீட்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.தையிட்டியில் ஒவ்வொரு பௌர்ணமி நாளும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கிழக்கில், மயிலத்தமடு ,மாதவனை மேய்ச்சல் தரையில் ஆயிரம் நாட்களுக்கு மேலாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.அதாவது 43 ஆண்டுகளின் பின்னரும் நிலமை மாறவில்லை.
83 ஜூலை இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு முக்கியமான திருப்புமுனை. கொழும்பில் சந்தையை பெருமளவுக்கு தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமிழ் வணிகர்களை,செல்வந்தர்களை,தமிழ் மேட்டுக்குடியை நோக்கி, தாழ்வுச் சிக்கலோடு கூடிய பொறாமை உணர்வோடு நடாத்தப்பட்ட இன அழிப்பு நடவடிக்கை அது.மூவாயிரத்துக்கும் குறையாத தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்;கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானவர்கள் தமிழ்ப் பகுதிகளை நோக்கி அகதிகளாகத் துரத்தப்பட்டார்கள்.
அதேசமயம்,அந்த இன அழிப்பு நடவடிக்கையானது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு எதிர்பாராத பின்வரும் விளைவுகளை ஏற்படுத்தியது.
முதலாவது விளைவு,இந்தியா இனப்பிரச்சினையில் நேரடியாக தலையிட்டது. தமிழ் இயக்கங்களுக்கு இந்தியா தமிழகத்தை ஒரு பின் தளமாக திறந்து விட்டது. அங்கே இந்திய மத்திய அரசு தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சியும் ஆயுதமும் வழங்கியது.அதன் விளைவாக ஈழப் போர் திடீரென்று பெரு வளர்ச்சி அடைந்தது.அதாவது நாட்டுக்குள் நடந்த ஓர் ஆயுதப் போராட்டம் இப்பொழுது நாடு கடந்து பிராந்திய மயப்பட்டது.அது அதன் அடுத்தடுத்த கட்டங்களில் உலக மயப்பட்டது. இப்பொழுது உலக மையப்பட்டு விட்டது.
இதை சிங்கள பௌத்த நோக்கு நிலையில் இருந்து கூறின், இலங்கைத் தீவின் உள்நாட்டு விவகாரத்துக்குள் ஒரு வெளியரசு தலையிடும் வாய்ப்புகளை ஜூலை 83 திறந்து விட்டது.இலங்கைத் தீவு நடைமுறையில் அதன் இறமையை இழக்கத் தொடங்கியது.
அதிலிருந்து தொடங்கி தீவிரமடைந்த ஈழப் போரின் விளைவாக, எண்பத்தி ஏழாம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்குள் இறங்கியது. அது அமைதி காக்கும் படை என்று அழைக்கப்பட்டாலும் நடைமுறையில் அது ஒரு வெளிநாட்டுப் படை.ஒரு வெளிநாட்டு படை இலங்கையின் ஆள் புல எல்லைக்குள் நிலை கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.அதன் நடைமுறை வார்த்தைகளில் சொன்னால் இலங்கை அரசு முழுமையான அர்த்தத்தில் அதன் இறமையை இழந்தது.
அங்கிருந்து தொடங்கி இன்று வரை இலங்கை அரசு அதன் இழந்த இறமையை மீட்டெடுக்க முடியவில்லை.முதலில் இந்தியப் படைகள் வந்தன.பின்னர் ஸ்கண்டிநேவிய யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு வந்தது. அதன்பின் சீனா வந்தது. சீனாவிடம் இலங்கை முதலில் அம்பாந்தோட்டையை இழந்தது. பின்னர் கொழும்பில்,தலைநகரத்தில் கேந்திரமான இடத்தில் கடல் இறையாண்மையை இழந்தது.கொழும்புக் கடலில் சீனா ஒரு செயற்கை நகரத்தை உருவாக்கியது.அதனால் இலங்கைத் தீவின் வரைபடம் மாற்றமடைந்தது.சீனப் பட்டினம் இப்பொழுது ஒரு பொருளாதார நகரமாக எழுச்சி பெற்று வருகிறது.
சீனாவுக்கு எதிராக இந்தியா கடலைக் கேட்டது;நிலத்தைக் கேட்டது.இப்பொழுது இரண்டு நாடுகளையும் இணைக்கும் பாலத்தைக் கட்டுமாறு கேட்கிறது.முதலில் சீனாவுக்கு கொடுக்கப்பட்ட தீவுப் பகுதிக்கான மீளப்புதுப்பிக்கும் எரிசக்தி திட்டத்தை இந்தியா தன் வசப்படுத்தியது. இப்பொழுது இந்தியா தீவுப் பகுதியில்,நெடுந்தீவு,அனலை தீவு,நைனா தீவு போன்ற இடங்களில் மீளப்புதுப்பிக்கும் எரிசக்தித் திட்டங்களைக் கட்டியெழுப்பி வருகிறது.கடந்த மாதம் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் அந்தத் தீவுகளுக்கு விஜயம் செய்தார்.நடந்து கொண்டிருக்கும் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டார்.அங்கே அமைக்கப்படுவது மீளப்புதுப்பிக்கும் எரிசக்தித் திட்டமோ இல்லையோ,அந்தக் கடலில் இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கிலான கண்காணிப்பு மையங்களே அவை.
எனவே 83 ஜூலைக்கு பின்னரான கடந்த 43 ஆண்டுகளையும் தொகுத்துப் பார்த்தால்,அங்கிருந்து தொடங்கி இலங்கை அதன் இறமையை இழந்து விட்டது.இப்பொழுதும் இலங்கை ஐநாவின் கண்காணிப்பு எல்லைக்குள்தான் காணப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஐநா கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கம் உலக சமூகத்துக்குப் பொறுப்புக் கூற வேண்டி இருக்கிறது.அதைவிட விசேஷமாக பன்னாட்டு நாணய நிதியம்,உலக வங்கி போன்றவற்றை மீறிச் செல்லமுடியாத, கீழ்ப்படிவுள்ள ஒரு சேவகன் ஆகவும் காணப்படுகிறது.அதாவது உலக வங்கி,பன்னாட்டு நாணய நிதியம் போன்றவற்றை மீறிச்செல்லும் சுதந்திரம் இல்லை.
எனவே கடந்த 43 ஆண்டுகளையும் தொகுத்துப் பார்த்தால் இச்சிறிய தீவானது இப்பொழுது பேரரசுகள் பங்கிடும் அப்பம்தான்.
இதைவிட மற்றொரு விளைவு.அது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு கற்பனை செய்யாத ஒன்று,கடந்த 43 ஆண்டுகளிலும் படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது.அதுதான் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் எழுச்சி.கொழும்பில் ரூபாய்களோடு காணப்பட்ட தமிழ் முதலாளிகளை அங்கிருந்து அடித்துத் துரத்தினார்கள்.ஆனால் இப்பொழுது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உலகமெங்கும் பெரு முதலாளிகளாக வளர்ச்சிபெற்ற ஈழத் தமிழர்கள் டொலர்களோடும் பவுன்ஸ்களோடும் யூரோக்களோடும் கொழும்பில் வந்து இறங்குகிறார்கள்.
இங்கே அவர்கள் காணிகளை வாங்கி அடுக்கு மாடிகளை கட்டுகிறார்கள். சிங்கள முதலாளிகளோடு இணைந்து முதலீடுகளை செய்கிறார்கள். அதைவிட முக்கியமாக வங்குரோத்து நிலையை அடைந்த சிங்கள முதலாளிகளின் சொத்துக்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.சிங்கள மக்கள் மத்தியில் ஒரு காலம் புகழ் பெற்றிருந்த எதிரிசிங்க வணிகக் குழுமமானது வங்குரோத்து நிலையை அடைந்தபோது அதன் பலநூறு நகைக் கடைகளையும் சுவர்ணவாகினி என்ற ஊடகத்தையும் புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர் ஒருவர் விலைகொடுத்து வாங்கினார்.
ரூபாய்களோடு காணப்பட்ட தமிழர்கள் இப்பொழுது பவுன்ஸ்,டொலர், யூரோக்களோடு உலகத் தரத்திலான பெரு வணிகர்களாக வெளிநாட்டுப் பிரஜைகளாக தாயகத்துக்கு வருகிறார்கள்.இது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு சிறிதும் எதிர்பாராத,கற்பனை செய்திராத ஒரு விளைவு. தமது சொந்தச் சாம்பலில் இருந்து ஈழத் தமிழர்கள் மீண்டு எழுவார்கள் என்பதற்கு அது ஒரு பொருளாதாரக் குறிகாட்டி.
அதுமட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாவது தலைமுறை முழு உலகத்தையும் திரும்பிப்பார்க்க வைக்கும் வளர்ச்சிகளைப் பெற்று வருகிறது. அந்தந்த நாடுகளில் தமிழ் வேரின் மகிமையை நிரூபிக்கும் எழுச்சிகளைத் தொட்டு வருகிறது.புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமானது உலகத்தின் மிகக் கவர்ச்சியான புலம்பெயர்ந்த சமூகங்களில் ஒன்றாகத் தன்னை நிரூபித்திருக்கிறது.கனடாவிலும் பிரித்தானியாவிலும் இரண்டு அமைச்சர்கள் வந்து விட்டார்கள்.
ஆனாலும் கடந்த 43 ஆண்டுகளிலும் ஏற்பட்ட எதிர்பாராத மேற்படி மாற்றங்களிலிருந்து கொழும்பு எதையாவது படித்திருக்கிறதா? இல்லை. கடந்த 43 ஆண்டுகளில் இந்தச் சிறிய தீவை ஆண்ட எந்தவோர் ஆட்சியாளரும் 83 ஜூலைக்காக மன்னிப்புக் கேட்கவில்லை.
யாழ் நூலகம் ஏரிக்கப்பட்டதற்கு ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கேட்டார்.அது ஒரே ஒரு விதிவிலக்கு.ஆனால் 83 ஜூலை நடந்த போது அவர் அந்த அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.அவருடைய மாமன்தான் நாட்டின் ஜனாதிபதி.யாருமே மன்னிப்புக் கேட்கவில்லை.கடந்த 43 ஆண்டுகளாக எந்த ஒரு சிங்களத் தலைவரும் 83 ஜூலைக்குப் பொறுப்புக் கூறவில்லை.ஜூலை 83க்கு பொறுப்புக் கூறத் தயாரில்லாத சிங்களத் தலைவர்களை நிலைமாறு கால நீதியின் கீழ் பொறுப்புக்கூற வைக்கலாம் என்று ஐநா முட்டாள்தனமாக நம்புகிறதா? அல்லது ஐநாவும் சேர்ந்து தமிழ் மக்களைப் பேய்க்காட்டுகிறதா?
இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டில் இனவாதம் இல்லை என்று கூறுகிறது.83 ஜூலை,வெலிக்கடைச் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டதற்கு அப்போது இருந்த அரசாங்கமே பொறுப்பு என்று அமைச்சர் விமல் ரட்நாயக்க நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.83 யூலைக்குப் பொறுப்பு “யுஎன்பியின் அரச பயங்கரவாதமே” என்று நீதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறுகிறார்.ஆயின்,யூலை 83க்குக் காரணமானவர்களை அரசாங்கம் தண்டிக்குமா? அல்லது அரசுக் கட்டமைப்பின் இப்போதுள்ள பிரதிநிதியாக தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்குமா? அல்லது அதைத் தான் செய்யவில்லை, UNPதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பழியை அப்போதிருந்த யுஎன்பி அரசாங்கத்தின் மீது சுமத்திவிட்டுத் தப்பி விடுமா?













