அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இராஜதந்திர முயற்சிகள் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை மசகு எண்ணெய் சந்தைகளில் புவிசார் அரசியல் சார்ந்த பதட்டத்தை குறைத்ததால், திங்களன்று (27) மசகு எண்ணெய் விலைகள் 10%-க்கும் அதிகமாகச் சரிந்தன.
அதன்படி, சர்வதேச அளவுகோலாகக் கருதப்படும் பிரெண்ட் மசகு எண்ணெய், முந்தைய வர்த்தக முடிவின் விலையான 91.68 டொலரிலிருந்து 10.4% சரிந்து, GMT 18.45 நிலவரப்படி பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 88.06 டொலர் என்ற விலையில் வர்த்தகமானது.
அமெரிக்காவின் முக்கிய குறியீடான வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் விலையும் 8% சரிந்து, 82.35 அமெரிக்க டொலர்களாக வர்த்தகமானது.
ஹார்முஸ் நீரிணை மற்றும் பாப் எல்-மண்டேப் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் இடையூறுகள் மத்திய கிழக்கு மசகு எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், கடந்த வாரம் பிரென்ட் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டொலர் வரை உயர்ந்தது.
சுமார் இரண்டு வார கால மோதல்களுக்குப் பின்னர், வெள்ளிக்கிழமையன்று ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிறுத்திவைத்ததைத் தொடர்ந்து, விலைகள் சரிந்தன.
வொஷிங்டன் தெஹ்ரானுடன் “சிறந்த பேச்சுவார்த்தைகளை” நடத்தி வருவதாகவும், ஒரு உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ட்ரம்ப் திங்களன்று கூறினார்.
ஆனால், பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
பதிலடி இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாகவும், அந்த நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து மேற்கொள்வது குறித்து ஓமனுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாகவும் ஈரான் தெரிவித்தது.
கஜகஸ்தான் எண்ணெயின் முக்கிய ஏற்றுமதிப் பாதையான, ரஷ்யாவின் கருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள காஸ்பியன் பைப்லைன் கூட்டமைப்பு முனையத்தில் மசகு எண்ணெய் ஏற்றுதல் மீண்டும் தொடங்கியதை அடுத்து, விநியோக நிலைமைகளும் மேம்பட்டன.
இருப்பினும், ஜிசான் மற்றும் யான்புவில் உள்ள சவுதி அராம்கோ தொடர்புடைய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஹவுத்திகள் உரிமை கோரியதைத் தொடர்ந்து, சந்தைகள் எச்சரிக்கையுடனேயே இருந்தன.
எனினும், சவுதி அரசாங்கமோ அல்லது அராம்கோவோ இந்தக் கூற்றுகளை உறுதிப்படுத்தவில்லை.















