ஈரானுடன் “சிறந்த பேச்சுவார்த்தைகளை” நடத்தி வருவதாகவும், இரு தரப்புக்கும் இடையிலான மோதல் தொடர்பாக ஒரு ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்கள்கிழமை (27) தெரிவித்தார்.
அதேவேளையில், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் அமெரிக்காவின் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
ட்ரம்பின் நம்பிக்கையான பேச்சுக்கு மாறாக, அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளில் விதிக்கப்பட்ட இடைநிறுத்தத்தை தெஹ்ரான் விரைவாகச் சோதித்தது போலத் தோன்றியது.
அதற்கு அமைவாக, சவுதி அரேபியா, ஜோர்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் திங்களன்று ஆளில்லா விமானத் தாக்குதல்களைப் பதிவு செய்தன.
ஐந்து மாதங்களாக நீடிக்கும் மோதலில் ட்ரம்ப் மேற்கொண்ட அண்மைய வியூக ரீதியான திடீர் மாற்றத்தின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான இரண்டு வார கால வான்வழித் தாக்குதல் நடவடிக்கையை வொஷிங்டன் கடந்த சனிக்கிழமையன்று திடீரென நிறுத்திவைத்தது.
இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்தர்கள் மூலம் செய்திகள் இன்னும் பரிமாறப்பட்டு வருவதாகவும், தெஹ்ரான் இராஜதந்திரத்தைக் கைவிடவில்லை என்றும், ஆனால் அது பேச்சுவார்த்தைகளைக் கோரியதாக வரும் செய்திகள் புனையப்பட்டவை என்றும் ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி திங்களன்று தெரிவித்தார்.
அதேநேரம், ட்ரம்ப் தானாக முன்வந்து அறிவித்த போர்நிறுத்தம் நீடிக்கும் வரை, ஈரானும் தனது தாக்குதல்களை நிறுத்தி வைக்கும் என்று ஈரானிய உயர் அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமையன்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திங்களன்று, ஈரானின் மத்திய இராணுவத் தலைமையகம் அமெரிக்காவின் மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தது; அதாவது, தனது கடல் எல்லைக்குள் உள்ள கப்பல்கள் மற்றும் எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்களை அமெரிக்கா அச்சுறுத்துவதாகவும், சட்டவிரோத கடல்வழி முற்றுகையைச் செயல்படுத்த முயற்சிப்பதாகவும் அது குற்றம் சாட்டியது.
இச்செயல்பாடுகள் பிராந்தியத்தில் மோதலைத் தீவிரப்படுத்துவதாக அமைவதாகவும் அது குறிப்பிட்டது.
இந்த நிலையில், ரியாத் உட்பட, பெட்ரோலிய இலக்குகளைக் குறிவைத்த ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியதாக சவுதி அரேபியா கூறியது.
ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களால் ஈராக்கிலிருந்து அவை ஏவப்பட்டதாகவும், பதிலடி கொடுக்கும் உரிமையைத் தாங்கள் கொண்டிருப்பதாகவும் அது தெரிவித்தது.
இதற்கிடையில், சவுதியின் ட்ரோன் ஊடுருவல்களுக்குப் பதிலடியாக, சவுதி அரேபியாவின் முக்கிய செங்கடல் துறைமுகமான யான்புவிற்கு எண்ணெய் கொண்டு செல்லும் கிழக்கு-மேற்கு குழாய்வழியைத் தாக்கியதாக யேமனில் உள்ள ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்திகள் தெரிவித்தனர்.













