கடந்த நான்கு நாட்களில் ஹட்டன், வட்டவளைப் பகுதியில் மொத்தமாக சுமார் 661 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
நேற்று (03) மாத்திரம் வட்டவளையில் 204 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதுவே அன்றைய தினம் நாட்டில் பதிவான அதிகபட்ச மழை வீழ்ச்சி என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனதீர குறிப்பிட்டார்.
அதேநேரம், அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவில் கடந்த மூன்று நாட்களில் 150 மி.மீ முதல் 500 மி.மீ வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கங்களால், குறுகிய காலத்தில் தீவிர மழை பொழிவது தற்போது மிகவும் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும், தித்வா (Ditwah) சூறாவளி காலத்தின்போது பதிவான மழைப்பொழிவு மிக அதிகமாக இருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய வானிலைச் சூழலை அத்தகைய சூழலுடன் ஒப்பிட முடியாது என்று வலியுறுத்தினார்.
மத்திய மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறும், அதிகாரப்பூர்வ வானிலை எச்சரிக்கைகளைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனிக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.












