இந்தியாவிற்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு 16 வீரர்களைக் கொண்ட இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த அணியில் விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்லவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதால் இலங்கை குழாத்தில் நான்கு விக்கெட் காப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மூன்று வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடமல் இருந்த டிக்வெல்ல, திடீரென டெஸ்ட் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதால் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவரும் தினேஷ் சந்திமால், நிஷான் மதுஷ்க, லஹிரு உதார ஆகியோரும் விக்கெட் காப்பாளர்கள் ஆவர். அப்படி இருக்கும்போது அணியில் நான்காவது விக்கெட் காப்பாளர் அவசியமா என கிரிக்கெட் விமர்சர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
லங்கா பிறீமியர் லீக் போட்டியின் போது காயமடைந்த வழமையான விக்கெட்காப்பாளர் குசல் மெண்டிஸ் இன்னும் புரண குணம் அடையாததால் அவருக்குப் பதிலாகவே டிக்வெல்ல இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கையின் மிகச் சிறந்த ஆரம்ப வீரரான பெத்தும் நிஸ்ஸங்கவும் பூரண உடற்தகுதியைக் கொண்டிராததால் அவரும் குழாத்தில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக லஹிரு உதார ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிஷான் மதுஷ்க மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
டெஸ்ட் அணிக்கு தனஞ்சய டி சில்வா தலைவராகவும் கமிந்து மெண்டிஸ் உப தலைவராகவும் தொடர்ந்து செயற்படவுள்ளனர்.
துடுப்பாட்ட வீரர்களாக லஹிரு உதார, நிஷான் மதுஷ்க, தினேஷ் சந்திமால், பசிந்து சூரியபண்டார, சோனால் தினூஷ ஆகியோரும் சுழற்பந்து வீச்சாளர்களான ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜயசூரிய ஆகியோருடன் அறிமுக வீரர் கேஷர நுவன்தவும் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர்களாக விஷ்வ பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமார, மிலன் ரத்நாயக்க, டில்ஷான் மதுஷன்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடதக்கது.







