நீண்ட கால அரசுப் பத்திரங்களுக்கான மீள் கொள்முதல் நடவடிக்கைகளை கணிசமாக விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை அமெரிக்க நிதியமைச்சகம் வெளியிட்டதைத் தொடர்ந்து, புதன்கிழமையன்று (19) விலைமதிப்பற்ற உலோகங்களின் விலை உயர்வு போக்கு தொடர்ந்தது.
இதில் தங்கம் 4%-க்கும் அதிகமாக உயர்ந்து ஒரு அவுன்ஸிற்கு 4,500 டொலர் என்ற உச்சத்தைக் கடந்தது.
2030 GMT நிலவரப்படி, தங்கத்தின் விலை 4.3% உயர்ந்து ஒரு அவுன்ஸிற்கு சுமார் 4,520 டொலர்களாக இருந்தது.
அதேவேளையில், வெள்ளியின் விலை இன்னும் வலுவாக 5.3% அதிகரித்து 66.70 டொலரை எட்டியது.
அமெரிக்க திறைசேரித் திணைக்களத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து அந்நாட்டின் திறைசேரிப் பத்திரங்களின் வருவாய் விகிதங்களில் ஏற்பட்ட கடும் சரிவு, அரசுப் பத்திரச் சந்தையில் பரவலான விலை உயர்வைத் தூண்டியதன் மூலம் இந்த ஏற்றத்திற்கு வித்திட்டது.
அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முட்டுக்கட்டை, எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட மீள் எழுச்சி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் குறித்த கவலைகள் ஆகியவற்றின் பின்னணியில், நீண்ட கால அமெரிக்க திறைசேரியின் பத்திரங்களின் வருவாய் இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்து பல ஆண்டு கால உச்சநிலைக்கு அருகிலேயே நீடித்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை நிலவரம்;
கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று (20) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 384,000 ரூபாவாக காணப்படுகிறது.
அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 353,300 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.













