வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர திருவிழாவின் 3ஆவது ரந்தோலி பெரஹெரா நாளை (25) கண்டி வீதிகளில் பவணிவரவுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் போக்குவரத்தைச் சீரமைப்பதற்காகவும் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்து உள்ளது.
கடந்த ஓகஸ்ட் 18 ஆம் திகதி ஆரம்பமான இவ்வருடத்திற்கான எசல பெரஹெரா மங்கள நிகழ்வுகள் வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி வரை தொடரவுள்ளன.
இதனை முன்னிட்டு வீதித் தடைகளை ஏற்படுத்துதல், விசேட பாதுகாப்புப் பணிகளை முன்னெடுத்தல், வாகனங்கள் மற்றும் பாதசாரிகளைச் பரிசோதித்தல், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வாகனத் தரிப்பிடங்களை ஒழுங்கமைத்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பெரஹெரா வீதி உலா இடம்பெறும் காலப்பகுதியில் கண்டி நகருக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்களுக்காகப் பின்வரும் மாற்று வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன:
கட்டுகஸ்தோட்டையிலிருந்து வரும் வாகனங்கள்:
கண்டி நகரை நோக்கி வரும் அனைத்துக் கனரக வாகனங்களும் மஹையாவ சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாக பொலிஸ் சந்தி வரை பயணிக்க முடியும்.
இலகுரக வாகனங்கள் டி.எஸ். சேனாநாயக்க வீதி, யதினுவர வீதி, மீரமக்கம் சபை சந்தி மற்றும் திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாகச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகரை விட்டு வெளியேறும் வாகனங்கள் பொலிஸ் சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாக மஹையாவவை நோக்கிச் செல்லலாம்.
தென்னகும்புர மற்றும் அம்பிட்டியாவிலிருந்து வரும் வாகனங்கள்:
சங்கராஜ மாவத்தையிலுள்ள வேல்ஸ் பார்க் சந்தியை அடைந்து, எஹெலபொல குமாரிஹாமி மாவத்தை வழியாக வலதுபுறம் திரும்பலாம்.
போகம்பர, கொழும்பு மற்றும் புகையிரத நிலையத்தை நோக்கிச் செல்லும் வாகனங்கள் இடதுபுறமாகவும், நகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் வலதுபுறமாகவும் பயணிக்க வேண்டும்.
ராஜபிஹில்ல மாவத்தை சந்தியிலிருந்து வரும் வாகனங்கள் பல்லியா வீதி வழியாக கண்டி நகரை அடையலாம்.
நகரத்திலிருந்து அம்பிட்டிய, தெல்தெனிய செல்லும் வாகனங்கள்:
கடிகாரக் கோபுரச் சுற்றTriகையிலிருந்து தலதா வீதி, குயீன்ஸ் ஹோட்டல் பக்கவாட்டு நுழைவாயிலுக்கு அருகிலுள்ள ஜாய் போட் சேவை வழியே சங்கராஜ மாவத்தையைச் சென்றடையலாம்.
போகம்பர சுற்றுகையிலிருந்தும் எஹெலபொல குமாரிஹாமி மாவத்தை, ராஜபிஹில்ல மாவத்தை மற்றும் வேல்ஸ் பார்க் சந்தி வழியாகவும் பயணிக்க முடியும்.
கொழும்பு – கண்டி இடையிலான போக்குவரத்து:
கொழும்பிலிருந்து கண்டி நகருக்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் வில்லியம் கோபல்லாவ மாவத்தை மற்றும் பழைய பேராதெனிய வீதியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெரஹெராவைக் காண்பதற்காக வருகை தரும் பக்தர்களும் ஓட்டுநர்களும் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ள இப்போக்குவரத்து ஒழுங்கமைப்புகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.















