நடிகர்கள் விஜய் மற்றும் தனுஷைத் தொடர்ந்து தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ரவி மோகனும் (ஜெயம் ரவி) அரசியலில் இணைவது குறித்த தனது நிலைப்பாட்டைப் வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் நடைபெற்ற தனது ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரனின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்திய பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், இனிவரும் காலங்களில் தனது ரசிகர்களின் சுப நிகழ்ச்சிகளில் கட்டாயம் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், நாளை (25) சென்னையில் நடைபெறவுள்ள தனது பிறந்தநாள் விழாவில் ரசிகர்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
திரைப்படங்கள் மற்றும் அரசியல் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ரவி மோகன், “ரசிகர்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன்” என்று தெரிவித்தார்.
அத்துடன், ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற ‘தனி ஒருவன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான (‘தனி ஒருவன் 2’) கதைப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் இதன் படப்பிடிப்பு முறைப்படி தொடங்கவுள்ளதாகவும் அவர் மேலதிக தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

















