டுபாயில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் “பஸ் லலித்” என்று அழைக்கப்படும் லலித் கன்னங்கர இலங்கைக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள (சிஐடி) அதிகாரிகள் குழு ஒன்று சந்தேக நபரை இன்று (25) அதிகாலையில் இலங்கைக்கு அழைத்து வந்ததாக பொலிஸ் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சருமான எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
களுத்துறை தெற்குப் பகுதியைச் சேர்ந்த 36 வயதான சந்தேகநபர், கொலை, கொலை முயற்சி, தாக்குதல் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாகத் தேடப்பட்டு வந்தார்.
அவிசாவளை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாக, மேல் மாகாணத் தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவருக்கு எதிராக இன்டர்போல் (Interpol) ‘சிவப்பு அறிவித்தல்’ (Red Notice) பெறப்பட்டிருந்தது.
கொலை வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதைத் தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு எதிராகத் திறந்த பிடியாணை (open warrant) ஒன்றையும் பிறப்பித்துள்ளது.
நெலுந்துடுவயில் உள்ள ஒருவரின் வீட்டின் வெளியே அவர் சுடப்பட்டுப் படுகாயமடைந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, அவிசாவளை நீதிவான் நீதிமன்றத்தால் மற்றொரு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
2022 ஒக்டோபர் 16 ஆம் திகதி அன்று கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் மூவர் படுகாயமடைந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, சந்தேகநபர் மீது அவிசாவளை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை ஒன்றையும் பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
















