கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 503 ஓட்டங்களைக் குவித்துப் பலமான நிலையில் உள்ளது.
முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ஓட்டங்கள் எடுத்திருந்த இந்திய அணி, இரண்டாம் நாளில் தனது ஓட்டக் குவிப்பைத் தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கலின் 117 ஓட்டங்களைத் தொடர்ந்து, அபாரமாக ஆடிய துருவ் ஜூரெல் 115 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
காயம் குணமடைந்து மீண்டுவந்த ரிஷப் பண்ட் அதிரடியாக 63 ஓட்டங்கள் சேர்க்க, இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 503 ஓட்டங்கள் எடுத்திருந்த போது தனது இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் அசித பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், கேசர நுவந்த மற்றும் பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பத்திலேயே பேரதிர்ச்சி காத்திருந்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான லஹிரு உடாரா (1 ஓட்டம்) மற்றும் பிரபாத் ஜெயசூர்யா (2 ஓட்டங்கள்) ஆகியோர் முறையே பிரசித் கிருஷ்ணா மற்றும் மானவ் சுதர் ஆகியோரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
மந்தமான வெளிச்சம் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்ட போது, இலங்கை அணி 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 ஓட்டங்களை மட்டுமே எடுத்துத் தடுமாறி வருகிறது.
தற்போது கமிலா மிஷார 5 ஓட்டங்களுடன் களத்தில் இருப்பதுடன், இலங்கை அணி இந்தியாவை விட 495 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.


















