பிரேசிலிய கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ, செரி சி அணியான ரவென்னாவில் இணைவதற்காக வியாழக்கிழமை (20) இத்தாலியை சென்றடைந்தார்.
இதன் மூலம், அவர் கடைசியாகக் களத்தில் தோன்றிய 11 ஆண்டுகளுக்குப் பின்னர் தொழில்முறை கால்பந்துக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
பார்சிலோனா மற்றும் ஏசி மிலன் அணிகளின் முன்னாள் முன்கள வீரரான 46 வயதான இவர், கடந்த ஜூன் மாதம் இத்தாலியின் மூன்றாம் நிலை கழக அணியுடன் ஒப்பந்தம் செய்ததோடு, அந்த அணியில் ஒரு பங்குதாரரும் ஆனார்.
வடக்கு இத்தாலிய நகரமான ரவென்னாவில் உள்ள மரினா டி ரவென்னா கடற்கரையில் நடைபெற்ற அணி அறிமுக விழாவில் ரொனால்டினோ ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

அவர் ஒரு வீரராக அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படுவார் என்றும், இதன் மூலம் இத்தாலியின் மூன்றாம் நிலை லீக் போட்டியான ‘சீரி சி’ (Serie C)-யில் விளையாடத் தகுதி பெறுவார் என்றும் அந்தக் கழகம் உறுதிப்படுத்தியது.
பிரேசிலின் முன்னாள் சர்வதேச வீரர் தனது தொழில்முறை வாழ்க்கையின் 300 ஆவது கோலை அடிக்க விரும்புகிறார்.
இருப்பினும், ரவென்னா அணிக்காக அவர் எப்போது களமிறங்குவார் என்பது குறித்த திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
மேலும் அவர் எத்தனை போட்டிகளில் விளையாடுவார் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
அடுத்த திங்கட்கிழமை ரெஜியானாவுக்கு எதிராக நடைபெறவுள்ள ரவென்னாவின் ‘சீரி சி’ (Serie C) தொடக்க ஆட்டத்தில் ரொனால்டினோ பங்கேற்க மாட்டார்.
பிரேசிலைச் சேர்ந்த இவர், 2018 இல் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2015-ல் ஃபுளூமினென்ஸ் அணிக்காக கடைசியாக தொழில்முறை ரீதியாக விளையாடினார்.
2002 இல் உலகக் கிண்ணத்தை வென்ற பிரேசில் அணியில் உறுப்பினராகவும், 2005-ஆம் ஆண்டின் பலோன் டி’ஓர் விருதைப் பெற்றவராகவும் இருந்த ரொனால்டினோ, பார்சிலோனாவுடன் சாம்பியன்ஸ் லீக்கையும், ஏசி மிலனுடன் சீரி ஏ பட்டத்தையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.















