இலங்கையின் கடல்சார் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை கண்டறியும் நோக்கில், மன்னார் படுகைக்கான (Mannar Basin) 2026 ஆம் ஆண்டுக்கான எண்ணெய் ஆய்வு உரிமம் வழங்கும் திட்டத்தை இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபை (CPDA) நேற்று (25) ஆரம்பித்துள்ளது.
கொழும்பிலுள்ள இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் மின்சக்தி மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகவும், தொழிலாளர் மற்றும் பிரதித் திறைசேரி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோவும் கலந்து கொண்டு திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
இந்தத் திட்டத்தின் கீழ், மன்னார் படுகையில் சுமார் 34,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய நான்கு ஆய்வு பிரிவுகள் சர்வதேச எரிசக்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன.
இந்த திட்டத்தின் மூலமாக சர்வதேச நிறுவனங்கள் நவீன புவியியல் ஆய்வு முறைகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவதுடன், அதிகாரசபையிடம் உள்ள புவியியல் தரவுகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று CPDA-வின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா குறிப்பிட்டார்.
முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், மன்னார் படுகையில் பெற்றோலியமும் இயற்கை எரிவாயுவும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய மதிப்பீடுகளின்படி, மன்னார் படுகையில் சுமார் 2 பில்லியன் பீப்பாய் அளவிலான பெற்றோலிய வளங்களும், 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயு வளங்களும் அகழ்வின் மூலம் மீட்டெடுக்கக்கூடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய உரிமம் வழங்கும் சுற்று, சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதோடு, இலங்கையின் கடல்சார் பெற்றோலிய வளங்களின் மேலதிக ஆய்வுகளுக்கும் முக்கிய முன்னேற்றமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


















