ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாகப் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் சிறப்புத் திட்டங்கள் அமைச்சருமான எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (28) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரான எஸ்.எம். சந்திரசேன திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
இதன்போது இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள், சந்தேகநபருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், நீதவான் நீதிமன்ற நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதைக் கருத்திற் கொண்ட நீதவான், குறிப்பிட்ட திகதியில் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சந்தேகநபருக்கு உத்தரவிட்டார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில், மாவட்டச் செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அழுத்தங்களை வழங்கி, 25 மில்லியன் ரூபா செலவில் இறக்குமதி செய்யப்பட்ட சோள விதைகளைத் தனது அரசியல் ஆதரவாளர்கள் மூலம் விநியோகித்து அரசாங்கத்திற்குப் பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தியதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் கடந்த ஜூலை 4 ஆம் திகதி கைது செய்யப்பட்ட எஸ்.எம். சந்திரசேன, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.














