முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராகத் தொடரப்பட்ட ஊழல் வழக்கின் முதற்கட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று (28) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரான மனுஷ நாணயக்கார திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
இதன்போது, இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதால், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பதற்குத் திகதியொன்றை ஒதுக்கித் தருமாறு இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் மன்றைக் கேட்டுக்கொண்டனர்.
இதனை பரிசீலித்த நீதவான், எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி மேலதிக அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், விவசாயப் பணிகளுக்காக இஸ்ரேலுக்குப் பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கையின் போது, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகளுக்கு அழுத்தங்களை வழங்கித் தனது அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாக மனுஷ நாணயக்கார மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட இவர், தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.













