ஹார்முஸ் நீரிணைக்கு அருகே 10 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் புதன்கிழமை(09) அன்று தெரிவித்தது.
ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் போரின் தொடக்கத்திலிருந்தே இரு தரப்பினருக்கும் இடையே கப்பல் போக்குவரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே மிகப்பெரிய அளவிலான தாக்குதல் நடவடிக்கையாக, அமெரிக்கா ஐந்து ஈரானிய எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்ததற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களால் மசகு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.
இதன் காரணமாக, பிரென்ட் மசகு எண்ணெய் எதிர்கால விலை, ஜூலை மாதத்திற்குப் பின்னர் முதல் முறையாக ஒரு பீப்பாய் 100 டொலரைத் தாண்டியது.
ஈரானின் அண்மைய தாக்குதலினால் எண்ணெய் கப்பல் ஒன்றில் இருந்த குறைந்தது ஒரு மாலுமி உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா பொருளாதார நடவடிக்கைகள் மூலம் ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க முயன்றுகொண்டிருந்த, ஒப்பீட்டளவில் அமைதியான ஒரு மாத காலத்திற்குப் பிறகு இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் தெரிவித்தது.
18 ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள இரண்டு ஏவுகணைகள் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் விழுந்து எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் ஜோர்டான் கூறியது.
அமெரிக்கப் படைகள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எந்தவொரு கூடுதல் தாக்குதலுக்கும் அளிக்கப்படும் பதிலடியை வெகுவாகத் தீவிரப்படுத்தப்போவதாக ஈரானின் புரட்சிகரப் படைப்பிரிவு (IRGC) தெரிவித்துள்ளது.
அத்துடன், பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கடற்கரைப் பகுதியான சபாஹார் (Chabahar) வரை நீட்டிக்கப்படவுள்ள, கடலில் புதிதாக விரிவாக்கப்பட்ட ‘அனுமதியற்ற மண்டலம்’ (off-limits zone) குறித்த வரைபடங்களை ஈரான் விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
இதேவேளை, தனது குடியரசுக் கட்சி காங்கிரஸின் மீதான கட்டுப்பாட்டைத் தக்கவைக்குமா என்பதைத் தீர்மானிக்கவுள்ள நவம்பர் மாத அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் செல்வாக்கு செலுத்த தெஹ்ரான் முயன்று வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.












