திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (10), அக்கட்சிக்கு எதிராகத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்தார்.
வரலாற்றை ஒருபோதும் மாற்ற முடியாது என்று இதன்போது வலியுறுத்திய அவர், அவசரநிலைக் காலத்தில் திமுக மேற்கொண்ட போராட்டங்களையும், குறிப்பாக ‘உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டத்தின்’ (MISA) கீழ் தான் கைது செய்யப்பட்டதையும், காவலில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுவதையும் நினைவுபடுத்தினார்.
‘எக்ஸ்’ (X) தளத்தில் பகிரப்பட்ட காணொளிச் செய்தி ஒன்றில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அண்மையில் தெரிவித்த கருத்துகளுக்குப் பதிலளித்த ஸ்டாலின், அரசியல் குற்றச்சாட்டுகளால் திமுகவின் வரலாற்றையோ அல்லது அதன் கொள்கைரீதியான போராட்டத்தையோ மாற்றிவிட முடியாது என்றும் கூறினார்.
“தம்பி விஜய், நீங்கள் சொன்னது உண்மைதான்; அது பொய் அல்ல. அவசரநிலைக் காலத்தில், அதை எதிர்த்துத் தலைவர் கலைஞர் மெரினா கடற்கரையில் ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து, மிசா சட்டத்தைக் கடுமையாக விமர்சித்தார்.
அதைத் தொடர்ந்து, அப்போது ஆட்சியில் இருந்த மத்திய அரசு, 1976-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் திகதியன்று திமுக அரசைக் கலைத்தது என்று ஸ்டாலின் கூறினார்.
தமது கைது நடவடிக்கையை நினைவுகூர்ந்த ஸ்டாலின், திமுக அரசு கலைக்கப்பட்ட உடனேயே காவல்துறையினர் தனது தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்ததாகக் கூறினார்.
“அரசு கலைக்கப்பட்ட அடுத்த வினாடியே, மிசா (MISA) சட்டத்தின் கீழ் என்னைக் கைது செய்யக் காவலர்கள் கோபாலபுரம் வீட்டிற்கு வந்தனர். அன்று நான் வீட்டில் இல்லை. என் மகன் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றிருந்தான்; அவன் நாளைதான் திரும்புவான். அவன் வந்ததும் நானே உங்களுக்குத் தகவல் தருகிறேன்; அப்போது வந்து அவனைக் கைது செய்துகொள்ளுங்கள் என்று கூறி கலைஞர் அவர்களைத் திருப்பி அனுப்பினார்,” என்று அவர் கூறினார்.
வீடு திரும்பிய மறுநாளே தான் கைது செய்யப்பட்டதாகக் கூறிய ஸ்டாலின், சிறையில் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
“சிறையில் எனக்குப் பல கொடுமைகள் இழைக்கப்பட்டன. தொழுநோயாளிகள் வைக்கப்பட்டிருந்த ஒரு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு நாங்கள் அடைத்து வைக்கப்பட்டோம். ஒரு சிறிய அறையில் பத்து பேர் அடைக்கப்பட்டிருந்தனர்,” என்று கூறிய அவர், காவலர்கள் கைதிகளைத் தடிகளால் தாக்கியதாகவும், பூட்ஸ் காலணிகளால் உதைத்ததாகவும் தெரிவித்தார்.
சிறையில் தாக்கப்பட்டதைத் தொடர்ந்தே திமுக தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்டி பாபு உயிரிழந்தார் என்று குற்றம் சாட்டிய அவர், அந்தத் தாக்குதலின்போது தனது தாடை எலும்பும் உடைந்ததாகக் குறிப்பிட்டார்.
“நீங்கள் உங்களை ஒரு கொள்கை சார்ந்த தலைவர் என்று கூறுகிறீர்கள். பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்தே இதுதான் திமுகவின் வரலாறு. அந்த வரலாற்றின் ஒரு பகுதியாக நானும் இருப்பது எனக்குப் பெருமைக்குரிய விடயம். என்னை யார் இழிவுபடுத்த முயன்றாலும், வரலாற்றை ஒருபோதும் மாற்ற முடியாது. அது என்றென்றும் அப்படியே நிலைத்திருக்கும்,” என்று ஸ்டாலின் கூறினார்.
சர்க்காரியா ஆணையம் மற்றும் கருணாநிதி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகளையும் ஸ்டாலின் நிராகரித்தார்.
அக்குற்றச்சாட்டுகள் உண்மையானவையாக நிரூபிக்கப்பட்டிருந்தால், அடுத்தடுத்து வந்த அரசுகள் நடவடிக்கை எடுத்திருக்கும் என்று அவர் கூறினார்.
அமலாக்கத் துறை வழக்குகளை திமுக-விற்கு எதிரான ஆதாரங்களாகப் பயன்படுத்துவதை அவர் மேலும் விமர்சித்ததுடன், அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக அந்த அமைப்பு பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
முதலமைச்சர் பதவிக்குரிய கண்ணியத்தைக் காத்து, நிர்வாகப் பணிகளில் கவனம் செலுத்துமாறு ஸ்டாலின் விஜயை வலியுறுத்தினார்.
“தமிழ்நாடு சட்டமன்றம் கண்ணியமும் மதிப்பும் வாய்ந்தது. பல சிறந்த தலைவர்கள் மற்றும் சான்றோர்களால் செதுக்கப்பட்ட ஓர் இடம் இது. அந்தப் பொறுப்பு இப்போது உங்கள் வசம் உள்ளது,” என்று ஸ்டாலின் கூறினார்.
“தேவையற்ற சர்ச்சைகளை” விடுத்து, சட்டம்-ஒழுங்கு, நலத்திட்டங்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் மீது சட்டமன்ற விவாதங்களை மையப்படுத்துமாறு அவர் விஜய்யிடம் கேட்டுக்கொண்டார்.
சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, பரந்தூர் விமான நிலையத் திட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் சமையல் எரிவாயு உருளை தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தோல்விகள் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து விஜய் தலைமையிலான அரசு மீது ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
“உங்கள் நிர்வாகமும் ஒரு திரைப்படப் படப்பிடிப்பைப் போலவே உள்ளது. திறமையற்ற உங்கள் நிர்வாகத்தை மறைக்க, இது போன்ற பல்வேறு ‘ரீல்ஸ்’ (reels) காணொளிகளை வெளியிட்டு ஒரு முழு தலைமுறையையும் நீங்கள் ஏமாற்றுகிறீர்கள்,” என்று அவர் குற்றம் சாட்டினார்.
அதிகாரத்தில் இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டிற்காகவும் அதன் மக்களுக்காகவும் திமுக தொடர்ந்து பாடுபடும் என்று ஸ்டாலின் கூறினார்.
“அதிகாரத்தை இழந்ததால் திமுக ஒருபோதும் தோல்வியடைந்ததாகக் கருதப்பட்டதில்லை. நாணயத்தின் இரு பக்கங்களைப் போல, இதை மக்கள் சேவையின் மற்றொரு முகமாகவே நான் பார்க்கிறேன். நாம் அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டின் உரிமைகள், அதன் வளர்ச்சி மற்றும் மக்களுக்காகத் தொடர்ந்து போராட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
“அவர்களது தாத்தாவுக்காக நாங்கள் போராடினோம். அவர்களது தந்தைக்காகவும் போராடினோம். இப்போது அவர்களுக்காகவும் போராடுவோம். இதுவே நமது திமுகவின் வரலாறு. அந்த வரலாறு ஒருபோதும் மாறாது; மாறவும் கூடாது,” என்று அவர் மேலும் கூறினார்.
செப்டம்பர் 7 அன்று சட்டமன்றத்தில் பேசிய விஜய், திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததோடு, கருணாநிதி தலைமையிலான அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்க்காரியா ஆணையத்தின் அறிக்கையையும் சுட்டிக்காட்டிய சில நாட்களுக்குப் பின்னர் அவரது இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளன.
கட்சி நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதன் மூலம் திமுக ஊழலில் ஈடுபட்டதாக அமுலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளதாகவும், கட்சி நிதி என்ற பெயரில் பணம் வசூலித்தது தொடர்பாக ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் விஜய் கூறினார்.
காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அரசியல் தலையீடு இன்றி காவல்துறை சுதந்திரமாகச் செயல்படும் என்றும் கூறிய முதலமைச்சர், சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தினார்.
அரசியல் விமர்சனங்கள் கடுமையாக இருக்கலாம் என்றாலும், அவை கண்ணியமற்ற அல்லது அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எல்லைக்குச் செல்லக்கூடாது என்று குறிப்பிட்ட விஜய், பெண்களைக் குறிவைத்துச் சொல்லப்படும் அவதூறான கருத்துகளுக்கு எதிராகவும் தனது கருத்தைப் பதிவு செய்தார்.















