மாளிகாவத்தை பகுதியில் கடந்த மாதம் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகைத்தந்திருந்த இனந்தெரியாத சந்தேகநபர்கள் இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சர்வதேச அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக்குழுத் தலைவரும் எனவும் அறியப்படும் கஞ்சிபாணை இம்ரானின் நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்றிருந்த இரகசிய தகவலுக்கமைய நேற்று இரவு மேற்படி படுகொ*லையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்திருந்தனர்.
மட்டக்குளி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குற்றச்செயலுக்காக சம்பவத்தன்று பிரதான துப்பாக்கிதாரியை மோட்டார் சைக்கிளில் அழைத்துவந்திருந்த நபரே, குற்றச்செயலுக்கு உதவி ஒத்தாசை புரிந்த குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது நடவடிக்கையின் போது சந்தேகநபரிடமிருந்து 12 கிராம் 470 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகாவத்தை – சங்கராஜ மாவத்தை பகுதியில் கடந்தமாதம் 10 ஆம் திகதி வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக நின்றுகொண்டிருந்த அதன் உரிமையாளர் மீது மோட்டார் சைக்கிள் ஒன்றில் வருகைத்தந்திருந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்து தப்பிச்சென்றிருந்தனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த 54 வயதுடைய மொஹம்மட் அஸீம் மொஹிதீன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்தார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் செலுத்துநர் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.















