இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ரூமேஷ் பத்திரகே,புடாபெஸ்ட்டில் நடைபெறும் உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (13) மீண்டும் 90 மீட்டருக்கும் அதிகமான தூரம் எறிந்து வெற்றி பெற்றார்.
தனது இறுதி முயற்சியில் 91.09 மீட்டர் தூரம் எறிந்து மற்றொரு பட்டத்தை அவர் வென்றார்.
அதேவேளையில், கிரெனடாவைச் சேர்ந்த முன்னாள் உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.18 மீட்டர் தூரத்துடன் இரண்டாம் இடத்தையும், ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 85.89 மீட்டர் தூரத்துடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
ஹங்கேரியின் புடாபெஸ்ட் போட்டிக்குச் செல்வதற்கு முன், பங்கேற்ற 12 போட்டிகளில் 11-ல் வெற்றி பெற்று, இந்த சீசனின் மிகச்சிறந்த ஈட்டி எறிதல் வீரராகப் பதிராகே திகழ்கிறார்.
டைமண்ட் லீக் இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு முன்னதாக, ரோமில் 92.62 மீட்டர் தூரம் எறிந்து உலகிலேயே சிறந்த தூரத்தைப் பதிவு செய்த அவர், அதைத் தொடர்ந்து சூரிச் போட்டியிலும் 92.07 மீட்டர் தூரம் எறிந்து வெற்றி பெற்றார்.
புடாபெஸ்டில் நடைபெற்ற போட்டியில், முதல் சுற்றில் 75.89 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீசி இலங்கை வீரர் மந்தமான தொடக்கத்தையே வெளிப்படுத்தினார்.
அதேவேளையில், ஐரோப்பிய சாம்பியனான வெபர் 80 மீட்டர் கோட்டையும் தாண்டி 84.09 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை வீசி முன்னிலை பெற்றார்.
இருப்பினும், கிரெனடாவைச் சேர்ந்த இருமுறை உலக சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் இரண்டாவது சுற்றில் ஈட்டியை 86.18 மீட்டர் தூரம் வீசியதால், அந்த ஜெர்மானிய வீரரின் முன்னிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
வெபர் தனது இரண்டாவது முயற்சியில் 85.89 மீட்டர் தூரம் எறிந்தாலும் தொடர்ந்து இரண்டாவது இடத்திலேயே இருந்தார்.
அதேவேளையில் பத்திரகே தனது தூரத்தை 85.69 மீட்டராக மேம்படுத்தினார்.

‘வேர்ல்ட் அல்டிமேட் அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப்’ போட்டியில், மூன்று சுற்றுகளுக்குப் பின்னர் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் விளையாட்டு வீரர்கள் மட்டுமே இறுதிச் சுற்றில் போட்டியிடும் வகையில் விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.
இறுதிச் சுற்றில் முதலில் களமிறங்கிய பத்திரகே, ஈட்டியை 91.09 மீட்டர் தூரத்திற்கு வீசினார்.
இதன் மூலம் நடப்பு சீசனில் தனது மூன்றாவது முறையாக 90 மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு ஈட்டியை வீசிய அவர், மற்றொரு பட்டத்தையும் தனதாக்கிக்கொண்டார்.
கிளாஸ்கோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஏற்கனவே பட்டம் வென்றுள்ள பத்திரகே, ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் செப்டம்பர் 19 ஆம் திகதி தொடங்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மற்றொரு பல்துறை விளையாட்டுப் பட்டத்தைக் கைப்பற்றுவதையும் குறிக்கோளாகக் கொண்டுள்ளார்.















