துபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி எட்டாவது முறையாகவும் மகளிர் ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது.
ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் தொடக்க விக்கெட்டுக்கு சாதனை அளவிலான 129 ஓட்டங்களைச் சேர்த்து இந்திய அணியை 183/5 என்ற நிலைக்கு கொண்டு சென்றனர்.
போட்டியைப் பொறுத்தவரை, இந்தியா நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் செய்யத் தீர்மானித்தது.
இந்தியத் தொடக்க ஆட்டக்காரர்களான ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் தொடர்ந்து சாதனை படைக்க, இலங்கை அணிக்கு இந்தியா சவாலான இலக்கை நிர்ணயித்தது.
ஷஃபாலி 39 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் அதிரடியாக 68 ஓட்டங்களை குவித்ததுடன், வெறும் 24 பந்துகளில் அரைசதத்தையும் எட்டினார்.
அதேவேளையில் ஸ்மிருதியும் 39 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 59 ஓட்டங்களைச் சேர்த்தார்.
2022-ஆம் ஆண்டுத் தொடரில் இலங்கைக்கு எதிராக மந்தனா 25 பந்துகளில் அரைசதம் அடித்திருந்த சாதனையை முறியடித்து, 24 பந்துகளில் அரைசதம் அடித்த ஷஃபாலியின் இந்தச் சாதனை மகளிர் ஆசியக் கிண்ண வரலாற்றிலேயே அதிவேகமானதாகும்.
நடப்புத் தொடரில் வலது கை வீராங்கனையான இவர் மூன்று முறை 50-க்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்துள்ளார்.
இதன் மூலம், 2024-இல் இலங்கை அணி கிண்ணத்தை வென்றபோது சமரி அதபத்து பதிவு செய்த சாதனையைச் சமன் செய்து, ஒரு மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரில் அதிக முறை இத்தகைய ஓட்டங்களை குவித்த வீராங்கனைகள் பட்டியலில் இணைந்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற தொடரில், ஐந்து போட்டிகள் மற்றும் இன்னிங்ஸ்களில் 47.20 சராசரி மற்றும் 171.01 ஸ்ட்ரைக் ரேட்டுடன் மொத்தம் 236 ஓட்டங்களை குவித்துள்ள அவர், அதிக ஓட்டங்கள் எடுத்த வீராங்கனையாகத் திகழ்கிறார்.
இதில் மூன்று அரைசதங்களும், 68 ஓட்டங்கள் என்ற அவரது சிறந்த ஓட்ட எண்ணிக்கையும் அடங்கும்.

முதல் விக்கெட்டுக்கு அவர்கள் எடுத்த 129 ஓட்டங்கள் தொடக்கக் கூட்டணி, மகளிர் ஆசியக் கிண்ண வரலாற்றில் எந்தவொரு விக்கெட்டுக்கும் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாகும்.
இது, 2022 சீசனில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி ஷர்மா இணைந்து எடுத்த 128 ஓட்டங்கள் என்ற கூட்டணியின் சாதனையை முறியடித்துள்ளது.
மேலும், இது எந்தவொரு மகளிர் டி20 சர்வதேசப் போட்டியின் இறுதிப் போட்டியிலும் எடுக்கப்பட்ட அதிகபட்ச கூட்டணியாகும்.
2016 மகளிர் டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் நட்சத்திரங்களான ஹெய்லி மேத்யூஸ் மற்றும் ஸ்டெஃபானி டெய்லர் இணைந்து எடுத்த 120 ஓட்டங்கள் கூட்டணியின் சாதனையையும் இது முறியடித்துள்ளது.
மகளிர் டி20 போட்டிகளில் ஸ்மிருதி மற்றும் ஷஃபாலி ஆறு முறை 100 ஓட்டங்களுக்கும் மேல் இணைப்பாட்டத்தை அமைத்து, எந்தவொரு விக்கெட்டுக்கும் இந்த வடிவத்தில் அதிக சத இணைப்பாட்டத்தை அமைத்த ஐக்கிய அரபு அமீரகத்தின் இஷா ஓசா மற்றும் தீர்த்தா சதீஷ் ஆகியோருடன் சமநிலையில் உள்ளனர்.
மகளிர் டி20 சர்வதேசப் போட்டிகளில் ஸ்மிருதி மற்றும் ஷஃபாலி ஆகியோரின் அபாரமான ஆட்டம் தொடர்கிறது.
இதுவரை 105 இன்னிங்ஸ்களில், இவர்கள் இருவரும் இணைந்து 38.32 சராசரி மற்றும் 8.26 ரன் ரேட் விகிதத்தில் மொத்தம் 3,909 ஓட்டங்களை குவித்துள்ளனர்.
இதில் ஆறு முறை 100 ஓட்டங்களுக்கும் அதிகமான இணைப்பாட்டமும் (century stands), 24 முறை 50 ஒட்டங்களுக்கும் அதிகமான இணைப்பாட்டமும் (half-century stands) அடங்கும்.
இப்போட்டி வடிவில் வேறு எந்த ஜோடியும் 3,000-க்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவிக்கவில்லை; மேலும், குறைந்தபட்சம் 1,500 ஓட்டங்கள் குவித்த 14 ஜோடிகளில், இவர்களைத் தவிர வேறு எந்த ஜோடியும் ஓவருக்கு 8 ஓட்டங்களுக்கும் அதிகமான வேகத்தில் ஓட்டம் சேர்த்ததில்லை.
ஸ்மிருதி மற்றும் ஷஃபாலி இடையேயான 129 ஓட்டங்கள் தொடக்க இணைப்பாட்டத்துக்குப் பிறகு, இந்திய துடுப்பாட்ட வரிசை சரிந்தது.
அணித் தலைவி ஹர்மன்பிரீத் கவுர் (14 பந்துகளில் 14 ஓட்டங்கள் ) மற்றும் ரிச்சா கோஷ் (13 பந்துகளில் 17 ஓட்டங்கள்) பெரிய அளவில் ஓட்டங்கள் எடுக்கத் தவறினர்.
பார்தி ஃபுல்மாலியின் (ஐந்து பந்துகளில் 15* ஓட்டம், ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன்) அதிரடி ஆட்டம், 20 ஓவர்களில் இந்தியாவை 183/5 என்ற ஓட்டம் எண்ணிக்கையை எட்ட வைத்தது.
இலங்கை அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களாக மிதாலி அயோத்யா (நான்கு ஓவர்களில் 1/33) மற்றும் சமரி அதபத்து (நான்கு ஓவர்களில் 1/34) ஆகியோர் திகழ்ந்தனர்.
தீப்தி ஷர்மாவும் தனது நான்கு ஓவர் வீச்சில் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றித் தனது பங்களிப்பை அளித்தார்.
அழுத்தம் நிறைந்த இறுதிப் போட்டியில் 184 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு, முதல் ஓவரிலேயே ஆரம்பக்கட்ட பின்னடைவு ஏற்பட்டது.
இமேஷா துலானி ஒரு பவுண்டரியுடன் ஆட்டத்தைத் தொடங்கினார்; ஆனால், இந்திய வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி கௌட் அதற்குச் சிறப்பாகப் பதிலடி கொடுத்து, நான்காவது பந்திலேயே அவரை ஆட்டமிழக்கச் செய்து, இலக்கை அணியைச் சங்கடமான நிலைக்குத் தள்ளினார்.
பின்னர் இலங்கை அணித் தலைவரி சமரி அதபத்து, விஷ்மி குணரத்னவுடன் இணைந்து இன்னிங்ஸை மீட்க முயற்சித்தார்.
பவர்பிளேயின் போது அதிரடியாக ஆடிய அதபத்து, ஐந்தாவது ஓவரில் ஷஃபாலி வர்மாவின் பந்துவீச்சில் டீப் ஸ்கொயர் லெக் திசையில் ஒரு சிக்ஸரையும் ஒரு பவுண்டரியையும் அடித்தார்.
பவர்பிளே முடிவில் இலங்கை 38/1 என்ற நிலையை எட்டியது; ஆனால், இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, தேவையான ஓட்ட விகிதம் பெறுவதைத் குறைவதைத் தடுத்தது.
கள அமைப்புக்கான கட்டுப்பாடுகள் (field restrictions) முடிவுக்கு வந்ததும் இந்திய அணித் தலைவி ஹர்மன்ப்ரீத் கவுர் சுழற்பந்து வீச்சை அறிமுகப்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் ஆட்டத்தின் இடைக்கட்ட ஓவர்களில் (middle overs) விரைவாக ஆதிக்கத்தைச் செலுத்தினர்.
சரணி இலங்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு தொடர்ந்து சவாலாக விளங்கினார், அதே வேளையில் மறுமுனையில் தீப்தி சிக்கனமாகப் பந்துவீசி அழுத்தத்தைத் தக்கவைத்தார்.
ஓவருக்கு 10 ஓட்டங்களுக்கும் அதிகமாக எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், இலங்கை அணி கூடுதல் ரிஸ்க் எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டது.
சமரி அதபத்து 32 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்து அணிக்காக அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்த நிலையில், 10-வது ஓவரில் தீப்தி ஷர்மாவால் ஆட்டமிழந்தார்.
அதே ஓவரில் விஷ்மி குணரத்னாவையும் தீப்தி ஆட்டமிழக்கச் செய்தார்.
இதனால் 10 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 63 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
14-வது ஓவரில் ஹர்ஷித சமரவிக்ரமாவை (9 ஓட்டங்கள்) ஆட்டமிழக்கச் செய்த சரணி, பின்னர் 16-வது ஓவரில் கவிஷா தில்ஹாரி (7) மற்றும் நிலக்ஷிகா சில்வா (22) ஆகியோரையும் வீழ்த்தினார்.
இதனால் 16 ஓவர்கள் முடிவில் இலங்கை மகளிர் அணி 102 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அடுத்த ஓவரில் ஷஃபாலி வர்மா ஹாசினி பெரேராவை (1 ஓட்டம் ) ஆட்டமிழக்கச் செய்தார்; அதேவேளையில், சுகந்திகா குமாரியை வீழ்த்தியதன் மூலம் சரணி தனது நான்கு விக்கெட் சாதனையை நிறைவு செய்தார்.
அவர் தனது நான்கு ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
பிரேமா ராவத், மிதாலி அயோத்யாவை ஓட்டம் ஏதுமின்றி ஆட்டமிழக்கச் செய்தார்; அதனைத் தொடர்ந்து தீப்தி சர்மா கௌஷானி நுத்யங்கனவை 9 ஓட்டங்களுக்கு வெளியேற்ற, இலங்கையின் சரிவு முழுமையடைந்தது.
அதன்படி, இலங்கை அணி 20 ஓவர்களில் 111 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில், இந்திய மகளிர் அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2026 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது.
பந்துவீச்சில் ஸ்ரீ சரணி நான்கு ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
போட்டியின் ஆட்டநாயகியாக ஷஃபாலி வர்மா தெரிவானார்.













