ரயில் தொழிற்சங்க ஊழியர்களால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இருப்பினும், ஒரு ரயிலை தவிர ஏனைய அனைத்துப் ரயில்களையும் வழமைபோன்று சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில் திணைக்கள ஊடகப் பேச்சாளரும், ரயில் போக்குவரத்து அத்தியட்சகருமான அசங்க சமரசிங்க தெரிவித்தார்.
தற்போதைய ரயில் பொது முகாமையாளரை பதவியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் தொழிற்சங்கங்கள் தற்போது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
நேற்று (16) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 48 மணிநேரத்திற்கு இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்த தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ரயில் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட்ட ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, நேற்றை தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே பல ரயில் சேவைகள் முடங்கியதாக தெரிவித்தார்.
இதனால் பல பணியாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியதாகவும் தமது கோரிக்கைகள் குறித்து உடன் கவனம் செலுத்துமாறும் அவர் வலியுறுத்தினார்.















