திம்புளை பத்தனை- டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் பத்தனை நகரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான வீ.மலர்விழி (53 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 26ஆம் திகதி வீட்டிலிருந்து காணாமற்போன குறித்த பெண் தொடர்பாக திம்புளை- பத்தனை பொலிஸ் நிலையத்தில் உறவினர்களினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டுக்கமைய டெவோன் நீர்வீழ்ச்சி பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது குடை, பாதணிகள், கைப்பை ஆகியவற்றை நீர்வீழ்ச்சி பகுதியில் இருந்து பொலிஸார் மீட்டனர்.
அதன்பின்னர் மாலை வேளையில், நீர்வீழ்ச்சியின் சுமார் 200 அடி பள்ளத்தில், நீரில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
மேலும் உயிரிழந்தோரின் உடல், பிரேத பரிசோதணைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.






