ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (30) நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது, நாட்டின் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு சார்ந்த 15 முக்கிய தீர்மானங்களுக்கு அமைச்சரவை உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவையில் எட்டப்பட்ட பிரதான முடிவுகளின் விபரங்கள் வருமாறு:
பேருந்துக் கட்டணக் கொள்கையில் திருத்தம்
மத்திய கிழக்குப் பிராந்தியப் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்கள், டொலர் விநியோகத் தளம்பலால் உயர்ந்துள்ள உதிரிப்பாகங்களின் விலை மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘லங்கா மெட்றோ ரான்ஸ்சிற்’ தாழ்மிதிப் பேருந்துகளின் இயக்கச் செலவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பேருந்துக் கட்டணச் சூத்திரத்தை இற்றைப்படுத்தவும், கட்டணக் கட்டமைப்பைத் திருத்தம் செய்யவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட குழுவின் விதப்புரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2027 ஆம் ஆண்டிற்கான மாணவர் பாதணி வழங்கும் திட்டம்
மாகாண மட்டத்திலுள்ள 8,36,571 பாடசாலை மற்றும் பிரிவெனா (துறவு நிலை/ துறவு நிலையில்லாத) மாணவர்களுக்கு 2027 ஆம் ஆண்டிற்காக ஒரு சோடி பாதணி வழங்கும் திட்டம் 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலைத் தவணைக்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளது.
இதற்கமைய மேல், தென், சப்பிரகமுவ, கிழக்கு, வடமேல் மாகாணங்களில் உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்தும், ஏனைய மாகாணங்களில் தலா 3,000/- ரூபாய் பெறுமதியான பரிசுச்சீட்டுகள் (Vouchers) மூலமும் பாதணிகளைக் கொள்வனவு செய்யக் கல்வி அமைச்சுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரச அபிவிருத்திப் பணிகளுக்காக 535 பயன்பாட்டு வாகனங்கள் கொள்வனவு
அரச அபிவிருத்திக் கருத்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, நிதி அமைச்சின் மூலம் உழவு இயந்திரங்கள் – 175,
கழிவுநீர் பவுசர்கள் – 100, பெக்கோ இயந்திரங்கள் – 100, டிப்பர் ஊர்திகள் – 160 ஆகிய
வாகனங்களைத் துரிதமாகக் கொள்வனவு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
‘தித்வா’ புயல் அனர்த்த மீள்நிலைக் கருத்திட்டங்கள்
2025 ஆம் ஆண்டு ஏற்பட்ட ‘தித்வா’ புயல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பொது உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரங்களை ‘மிகவும் சிறப்பாக மீளக்கட்டியெழுப்புதல்’ என்ற கொள்கையின் கீழ் புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, வருடாந்த வரவு செலவுத்திட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் 2026 முதல் 515,460.26 மில்லியன் ரூபாய் செலவில் 1,028 மத்திய அரச கருத்திட்டங்களும், 102,219.05 மில்லியன் ரூபாய் செலவில் 38 மாகாண சபைக் கருத்திட்டங்களும் அமுல்படுத்தப்படவுள்ளன.
யாழ்ப்பாண நகர சபைக் கட்டிட நிர்மாணக் கருத்திட்டம் (கட்டம் – 02)
பொருளாதார நெருக்கடியால் இடைநடுவில் நிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாண நகர சபைக் கட்டிடத்தின் 70% பௌதீகப் பணிகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், வளிச்சீராக்கித் தொகுதி உள்ளிட்ட அதன் இரண்டாம் கட்டப் பணிகளை நிறைவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, அசல் ஒப்பந்தக்காரரான மத்திய பொறியியல் சேவைகள் கம்பனி மூலம் 1,958.85 மில்லியன் ரூபாய் திருத்தப்பட்ட செலவினத்தின் கீழ் பணிகளைப் பூர்த்தி செய்ய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
விசர் நாய்க்கடி ஒழிப்பு மற்றும் வளர்ப்புப் பிராணிகள் பதிவுச் சட்டமூலம்
விசர் நாய்க்கடி நோய் மற்றும் வளர்ப்புப் பிராணிகள் பதிவு தொடர்பான பழைய கட்டளைச் சட்டங்களை இணைத்து, நீர்வெறுப்பு நோய்த் தடுப்பூசியைக் கட்டாயமாக்கல், பிராணிகள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தல் மற்றும் பொறுப்புவாய்ந்த நிறுவனங்களின் அதிகாரங்களை வரையறுத்தல் ஆகிய நோக்கங்களுடன் சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டு, சட்டமா அதிபரின் ஒப்புதல் பெற்ற புதிய சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடவும், பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் வங்கிகள் கண்காணிப்புத் திணைக்களம் டிஜிட்டல் மயமாக்கல்
அனுமதிப்பத்திரம் பெற்ற வங்கிகளைக் கண்காணிக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் பணிகளின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தொழில்நுட்ப ஒத்துழைப்புடன், பௌதீக அறிக்கை முறைமைக்கு மாற்றாக நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்புத் தீர்வொன்றை (Automation) அமுல்படுத்துவதற்கான பெறுகைச் செயன்முறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2026 சிறுபோக நெல் கொள்வனவு
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் கொள்வனவு வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் தங்குதடையின்றி வெற்றிகரமாக அமுல்படுத்துவதற்காகக் கமத்தொழில் அமைச்சிற்கு 6,000 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.
‘தித்வா’ புயல் மீள்நிர்மாணத்திற்காக இந்திய அரசிடமிருந்து 450 மில்லியன் டொலர் உதவி
‘தித்வா’ புயலால் இலங்கைக்கு ஏற்பட்ட 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பாதிப்புகளை ஈடுசெய்ய, இந்திய அரசாங்கம் தனது ‘சாகர்பந்து நடவடிக்கையின்’ கீழ் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.
இதன்படி:மொத்த உதவி – 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள், கடன் வசதி – 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள், கொடை – 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்த இருதரப்பு நிதியுதவி ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சுக்கு உத்தியோகபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.












