தேசியத்துக்கும், பௌத்த மதத்துக்கும் முன்னுரிமை வழங்கும் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
குருநாகலில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆளும் தரப்பில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக வெளியான செய்திகள் அடிப்படையற்றவை.
நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுனவின் வசமே பெரும்பான்மை பலம் உள்ளது. எதிர்க்கட்சி பக்கம் செல்ல வேண்டிய தேவை எமக்கில்லை. ஜனாதிபதி தேர்தல் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.
அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்தலை நடத்துமாறு பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளதாக எதிர்தரப்பினர் குறிப்பிடுவது பொய்யான செய்தி.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துமாறு நாங்கள் வலியுறுத்தவில்லை. எந்த தேர்தலை நடத்தினாலும் அதனை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம். பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதியாக களமிறக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
தேசியத்துக்கும்,பௌத்த மதத்துக்கும் அதேபோல் ஏனைய மதங்களுக்கும் முன்னுரிமை வழங்கும் நபரை
ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம். பொருளாதார மீட்சி என்று குறிப்பிட்டுக் கொண்டு
தேசிய வளங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்தால்
அதற்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க மாட்டோம். நட்டமடையும் அரச நிறுவனங்களை தேசிய பங்குடையுடன் நிர்வகிக்க வேண்டும்” இவ்வாறு சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.















