யாழ் மாவட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கூட்டமானது கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்று யாழ் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இவ் விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் ஏ. வி. எம். சம்பத் துய்யகொந்த ” அனர்த்ததினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மருந்துகள் இடையூறு இன்றி சீராக விநியோகிக்க திறைசேரி விசேட ஒதுக்கீடுகளை காலதாமதமின்றி ஒதுக்க ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இயற்கை அனர்த்தத்தால் அதிகளவு பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாகச் சென்று தீர்வுகள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ”பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தனியார் அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள், வர்த்தகர்கள் வழங்கி வரும் உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாதுகாப்பு நிலையங்களில் இல்லாமல் வீடுகளில் இருப்போருக்கும் உதவிகள் வழங்க ஒன்றிணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறையில் மின்கம்பங்கள் விழும் நிலையில் உள்ளது எனவும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வீதி பாரிய சேதமடைந்திருப்பதாகவும் குறிப்பிட்டு துறைசார்ந்த திணைக்களங்கள் நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கருத்து தெரிவிக்கையில்
வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதற்கு சட்டத்திற்கு மாறாக கட்டப்பட்ட கட்டடங்களும் காரணம் எனவும், அவற்றை அகற்ற நடவடிக்கைகளை மாநகர சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் வெள்ள அனர்த்தம் வராமல் இருக்க ஒன்றிணைந்து நடிவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோல் கொடுத்த முப்படையினருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்
இவ் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி சண்முகநாதன் ஶ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் உதய ஹேரத், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ. இளங்கோவன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் ரி. என். சூரியகுமார், முப்படைகளின் உயர் அதிகாரிகள், வடமகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரதேச செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.















