நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது .
ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்று முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச் சாட்டில் இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது .
சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஊழல் எதிர்ப்புக் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய அமைச்சருமான வசந்த சமரசிங்க செய்த புகாரைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் நடத்தப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நிதி விசாரணைப் பிரிவு முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பணங்களைச் சமர்ப்பித்திருந்தது .
அந்த வழக்கில் நாமல் ராஜபக்ஷ ஒரு சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.