முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் வைத்து இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணிகளை ஏற்றிச்சென்ற அரச பேருந்தின் சாரதி மீது விசுவமடுப்பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்கள் சிலர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
வால் வெட்டு தாக்குதலுக்கு இலக்கான சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பயணிகளை இறக்குவதற்காக பேருந்தை நிறுத்திய போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக பேருந்தில் பயணித்த பயணிகள் நடுவீதியில் நீண்ட நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.