2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்ட உரை நாளை (17) திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து வரவுசெலவுத் திட்ட தொடர்பான விவாதம் பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
கடந்த ஜனவரி 09 ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காகப் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடு பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை ஏழு நாட்கள் இடம்பெறவுள்ளது.
அத்துடன், பெப்ரவரி 25 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் குறித்த குழுநிலை விவாதம் பெப்ரவரி 27 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை 4 சனிக்கிழமை நாட்கள் உள்ளடங்கலாக 19 நாட்கள் இடம்பெறவுள்ளன.
இதற்கான வாக்கெடுப்பு மார்ச் 21 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
வரவுசெலவுத்திட்ட காலப்பகுதியில் காலை 9.30 மணி முதல் காலை 10.00 மணி வரையான நேரம் 5 வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதுடன், காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரையான காலப் பகுதியில் வரவுசெலவுத்திட்ட விவாதம் இடம்பெறும்.
வாக்கெடுப்பு நடத்தப்படும் தினங்களான பெப்ரவரி 25 மற்றும் மார்ச் 21 ஆம் திகதிகள் தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் மாலை 6.00 மணி முதல் மாலை 6.30 மணிவரையான காலப்பகுதி சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.