தற்போதைய அரசாங்கம் என்னவாறான பொய்களை எல்லாம் கூற முடியுமோ அத்தனையையும் கூறி மக்களை ஏமாற்றியுள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
களனி பிரதேசத்தில் நேற்று (16) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அரசியலமைப்பு பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தையும், தாம் விரும்பும் அரசியல் கருத்தைக் கொண்டிருப்பதற்கான சுதந்திரத்தையும் வழங்குகிறது எனவும், ஆனால் அரசாங்கத்தை விமர்சிக்கும் தரப்பினர் அச்சுறுத்தப்படுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அண்மையில் மாத்தளை மாவட்டத்தின் யடவத்தை பிரதேசத்தை சேர்ந்த பிரஜை ஒருவர் தனது கருத்துக்களை முகநூல் ஊடாக வெளிப்படுத்திய போது அரசாங்கத்தையும், மக்கள் விடுதலை முன்னணியையும் சேர்ந்த ஒருவர், அவரின் வீடு சென்று அரசாங்கத்தை விமர்சிப்பதை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்திருந்ததாக எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத வேளையில், பேச்சு சுதந்திரத்தை மறுக்கும் வகையில் வீடு வீடாகச் செல்லும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வருகின்றது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் விசனம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறு இருப்பினும் குடி மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் முன்நிற்கும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பேச்சு சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் என்பது தனிமனித உரிமைகளாகும் எனவும், அதில் யாரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.