அம்பலாங்கொடையில் நேற்று (14) இரவு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, அந்தப் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பொலிஸாருக்குத் தகவல் அளித்திருக்கலாம் என்ற சந்தேகமே காரணம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.
அம்பலாங்கொடை, இடம்தொட்ட விகாரைக்கு அருகில் நேற்று இரவு 6.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் பொடி சுத்தா என்ற கிருஷாந்த மெண்டிஸ் என்பவரே கொல்லப்பட்டார்.
45 வயதான பொடி சுத்தா நான்கு பிள்ளைகளின் தந்தை என்றும், அவர் குறித்தப் பகுதியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் மீது எந்த குற்றவியல் குற்றச்சாட்டுகளும் இல்லை என்றும், அவர் அதே பகுதியில் அமைதியாக வாழ்ந்து வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இருப்பினும், இந்தப் கொலையை பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் நபரான சமன் பிரியந்த எனப்படும் சமன் கொல்லா செய்திருக்கலாம் எனவும், குறித்த பகுதியில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளதாக எழுந்த சந்தேகமே இதற்கு காரணமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட நபர் கடந்த ஜனவரி மாதம் சமன் கொல்லா குழுவைச் சேர்ந்த இருவரால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2016 டிசம்பர் 5ஆம் திகதியன்று அம்பலங்கொடையின் இடம்தொட்ட பகுதியில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய சந்தேகத்தின் பேரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் நான்கு வயது மகன் ஆகியோர் சமன் கொல்லாவின் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.