பப்புவா நியூ கினியாவில் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கிற்குத் திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் சுமார் 20 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
சுற்றுலா தலங்களுக்கு பெயர் போன இந்நாட்டில் பொதுமக்கள் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக சுமார் 13 லட்சம் பேர் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் பேஸ்புக் மூலமாக போலி செய்திகள், மற்றும் ஆபாச படங்கள் அதிகளவில் பரப்பப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் பேஸ்புக்கிற்கு தடைவிதிக்கப்படும் என தகவல் வெளியாகி வந்தது.
இந்நிலையில் பப்புவா நியூ கினியாவில் பேஸ்புக்குக்கு திடீரென தடை விதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பேஸ்புக்கை பயன்படுத்த முடியாமல் சிரமம் அடைந்தனர். இது மக்களின் கருத்து சுதந்திரத்தையும், பேச்சுரிமையையும் பறிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.