பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 27 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசாக்களை இஸ்ரேல் அரசு இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜெருசலேமிலுள்ள பிரெஞ்சு தூதரகம், பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 27 பேருக்கு இஸ்ரேல் வர அழைப்பு விடுத்திருந்த நிலையில் இஸ்ரேல் அரசு திடீரென அவர்கள் 27 பேருடைய விசாக்களையும் இரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
எவ்வாறு இருப்பினும் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அமைதிக் கலாச்சாரத்தை வலுப்படுத்துவதே தங்கள் இஸ்ரேல் பயணத்தின் நோக்கம் என 27 பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அந்த குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை இஸ்ரேல் அரசுக்கு எதிராக செயல்படக்கூடும் என கருதப்படுவோருக்கு இஸ்ரேல் அதிகாரிகள் தடை விதிக்கலாம் என்னும் சட்டத்தின் கீழ் அந்த 27 பேரின் விசாக்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் விரைவில் அங்கீகரிக்கலாம் என அண்மையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன், தெரிவித்திருந்த கருத்து இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவில் விரிசலை உருவாக்கியுள்ள நிலையில், இஸ்ரேல் அரசு இப்படி ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.