தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்றை அமைக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தலைமை நீதிபதியிடம் எழுத்துப்பூர்வ கடிதம் மூலம் சட்டமா அதிபர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல 07 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அதன் பின்னர் அவருக்கு 2024 செப்டெம்பரில் பிணை வழங்கப்பட்டது.
இரண்டு மூத்த அரச அதிகாரிகளின் உதவியுடன் போலி ஆவணங்களை உருவாக்கி 22,500 தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசி குப்பிகளை ஒரு மருந்து நிறுவனம் இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிஐடி விசாரணையைத் தொடங்கிய பின்னர், அவர் பல சுகாதார அமைச்சக அதிகாரிகளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், மேற்படி தரமற்ற மருந்தை இறக்குமதி செய்ததன் மூலம் ரூ.130 மில்லியன் நிதி மோசடி நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக கெஹெலிய ரம்புக்வெல்ல அண்மையில் (ஏப்ரல் 09) குற்றப் புலனாய்வுப் பிரிவில் (சிஐடி) முன்னிலையாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.