வெலகெதர, ஹவன்பொல பகுதியில் தலைக்கவசத்தினால் தாக்குதலுக்குள்ளாகி, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலுக்கு மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் பயன்படுத்தப்பட்டதாக மாவதகம பொலிஸார் நடத்திய விசாரணைகள் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேற்றைய (22) தினம் அரேபொல பகுதியில் 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் அரேபொல மற்றும் அம்பகோட்டை பகுதிகளைச் சேர்ந்த 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குற்றத்தில் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை மாவதகம மற்றும் வெலகெதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.