காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த மற்றும் பலர் காயமடைந்த தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்கள் என்று சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் புகைப்படத்தையும், அவர்களின் ஓவியங்களையும் இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.
அவர்களில் மூன்று பயங்கரவாதிகள் ஆசிப் புஜி, சுலேமான் ஷா மற்றும் அபு தல்ஹா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) ஒரு பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டைச் சேர்ந்த தாக்குதல்காரர்கள், பஹல்காமில் உள்ள பிரபலமான பைசரன் புல்வெளியில் சுற்றுலாப் பயணிகள் மீது செவ்வாய்க்கிழமை (22) துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இது அண்மைய ஆண்டுகளில் காஷ்மீரில் நடந்த மிகக் கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றாகும்.
குறைந்தது 5–6 பயங்கரவாதிகள், உருமறைப்பு உடைகள் மற்றும் குர்தா-பைஜாமாக்களை அணிந்து, பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள அடர்ந்த பைன் காட்டில் இருந்து பைசரன் புல்வெளிக்கு வந்து AK-47 துப்பாக்கிகளுடன் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்தக் குழுவில் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பு பள்ளத்தாக்கில் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளும் அடங்குவர் என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
லஷ்கர்-இ-தொய்பாவின் உயர்மட்ட தளபதியான காலித் என்கிற சைஃபுல்லா கசூரி, படுகொலையின் மூளையாக செயல்பட்டதாக புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளன.
காட்டுப் பகுதியைப் பயன்படுத்தி அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்ற பயங்கரவாதிகளைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் மிகப்பெரிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.
முதற்கட்ட தடயவியல் பகுப்பாய்வு மற்றும் உயிர் பிழைத்தவர்களின் சாட்சியங்களின்படி, பயங்கரவாதிகள் இராணுவ தர ஆயுதங்கள் மற்றும் மேம்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.