அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு இருதரப்பினராலும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரி விதிப்பு குறித்து அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்துடன் வொஷிங்டனில் நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கைத் தூதுக்குழு வொஷிங்டன் டிசியில் அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரீயரை (Jamieson Greer) சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது, அமெரிக்க வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரீயருக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் முதல் பிரதிகள் நிதியமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பிரதிநிதிகளால் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
கடந்த காலங்களில் எதிர்நோக்கிய சவால்கள் மற்றும் எதிர்காலத்தில் முகம்கொடுக்ககூடிய சவால்களை வெற்றிகொள்ளவும் பொருளாதாரத்தை மீண்டும் முழுமையாக வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தூதுக்குழுவினரால் விளக்கமளிக்கப்பட்டது.
வர்த்தக பற்றாக்குறை தொடர்பாகவும், தீர்வை வரி மற்றும் தீர்வை அற்ற தடைகளை மட்டுப்படுத்த அமெரிக்காவுடன் செயலாற்ற இலங்கை கொண்டிருக்கும் துரித மற்றும் முன்னேற்றகரமான அர்ப்பணிப்பு குறித்தும் இலங்கை தூதுக்குழு இதன்போது தெளிவுபடுத்தியிருந்தது.
இந்த பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு இலங்கை முன்வைத்திருக்கும் முன்மொழிவுகளை வர்த்தக முகவர் அலுவலகத்தின் தூதுவர் ஜேமிசன் கிரீயரை வரவேற்றிருந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையில் பக்கச்சார்பற்ற மற்றும் நியாயமான வர்த்தக தொடர்பை உறுதிப்படுத்த விரைவில் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள முடியுமெனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ், இலங்கைக்கான நான்காவது மீளாய்வு இன்றுடன் நிறைவடைகின்றது.
நான்காவது மீளாய்வு நிறைவடைந்ததன் பின்னர் ஐந்தாவது கடன் தவணையை விடுவிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட உடன்படிக்கை எட்டப்படும் என பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல் சர்வதேச நாணய நிதியபிரதிநிதிகள் மற்றும் இலங்கை பிரதிநிதிகளுக்கிடையில் அண்மையில் ஆரம்பமானது. இந்த நிலையில் நான்காவது மீளாய்வின் இறுதி கலந்துரையாடல் வொஷிங்டனில் இன்று இடம்பெறவுள்ளது.
கலந்துரையாடலில் பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்ணான்டோ ஹர்ஷன சூரியப்பெரும நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை நான்காவது மீளாய்வு நிறைவடைந்ததன் பின்னர் ஐந்தாவது கடன் தவணையை விடுவிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் மட்ட உடன்படிக்கை எட்டப்படும் என பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்
இதனிடையே அமெரிக்க ஜனாதிபதியின் பரஸ்பர வரி விதிப்பு தீர்மானம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய சவாலாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
.