ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட குறைந்தது 26 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தென்னிந்திய முன்னணி நடிகர் அஜித் குமார் கண்டனம் தெரிவித்தார்.
புது டெல்லியில் திங்களன்று (28) நடைபெற்ற பத்ம விருது வழங்கும் விழாவிக்கு பின்னர் ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.
அத்துடன், மக்கள் ஒருவருக்கொருவர் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும், ஒவ்வொரு மதமும் சாதியும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், இந்தியாவின் ஆயுதப்படைகளின் முயற்சிகளைப் பாராட்டிய நடிகர் அஜித்குமார் அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தினார்.
“இன்று (நேற்று) ஆயுதப்படைகளைச் சேர்ந்த பலரை நான் சந்தித்தேன். அவர்களின் தியாகங்களுக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம் என்பதை அவர்கள் அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள், அதனால் நாம் நிம்மதியாக உறங்க முடியும். என் இதயம் அவர்களுக்காக துடிக்கிறது, மேலும் அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் ஒரு அழகான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன். அவர்கள் நமது எல்லைகளைப் பாதுகாக்க மிகவும் அயராது உழைக்கிறார்கள், குறைந்தபட்சம் அவர்களின் மரியாதைக்காக, நம் நாட்டிற்குள், ஒருவருக்கொருவர் மதிக்கவும், ஒவ்வொரு மதத்தையும், ஒவ்வொரு சாதியையும் மதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும், குறைந்தபட்சம் இந்தியாவில் நமக்குள் சண்டையிடக்கூடாது என்று நான் நினைக்கிறேன்.” – என்றார்.
நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார், இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷண் விருதை, ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து நேற்று புது டெல்லியில் அமைந்துள்ள ராஷ்டிரபதி பவனில் பெற்றுக்கொண்டார்.
ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டபடி, மத்திய அரசு அறிவித்த 19 பத்ம பூஷண் விருது பெற்றவர்களில் அவரும் ஒருவர்.
விருதினை வாங்குவதற்காக அஜித் குமார் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல அமைச்சர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.