ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகாதானி, பிரதமர் ஹரினி அமரசூரியவை அலரிமாளிகையில் இன்று(04) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது நீண்டகால இருதரப்பு நட்புறவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதுடன் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு ஜப்பானின் ஆதரவை ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
இதன்போது,கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய உறவுகளில் இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம், குறிப்பாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம், தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இலங்கைக்கான ஜப்பானிய தூதர் உட்பட ஜப்பான் மற்றும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூத்த அதிகாரிகளும் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.