2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (08) நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் (DC) அணிகளுக்கு இடையிலான போட்டியானது இடைநிறுத்தம் செய்யப்பட்டது.
தர்மசாலாவில் மழை காரணமாக ஆரம்பத்தில் 60 நிமிடங்கள் தாமதமான போட்டி, முதல் இன்னிங்ஸில் 10.1 ஓவர்களுக்குப் பின்னர், மைதான ஒளி விளக்கு கோளாறு காரணமாக கைவிடப்பட்டது.
இருப்பினும், அருகிலுள்ள நகரங்களான ஜம்மு மற்றும் பதான்கோட்டில் விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான இராணுவ மோதலுடன் தொடர்புடைய பாதுகாப்பு நிலைமை, போட்டியை தொடர்ந்து நடத்துவதில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியதாகவும் அது கூறியிருந்தது.
எனினும், இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை.
முன்னதாக வியாழக்கிழமை, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள போட்டியை தர்மசாலாவிலிருந்து அகமதாபாத்திற்கு பிசிசிஐ மாற்றியது.
பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் இந்திய ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்ததை அடுத்து, ராவல்பிண்டியில் நடைபெறவிருந்த பெஷாவர் ஸல்மி மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியும் நேற்று ஒத்திவைக்கப்பட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) பின்னர், தொடர்ச்சியான பதட்டங்களுக்கு மத்தியில், பிஎஸ்எல் சீசனின் மீதமுள்ள போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றுவதாக அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.