கொட்டாஞ்சேனைச் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவி தொடர்பாக நாடாளுமன்றில் இன்று கருத்துத் தெரிவித்த போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பந்தத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசிடம் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் குறித்த மாணவி உயிரிழந்துள்ளமை சாதாரண விடயம் அல்ல எனவும், தாம் கல்வி கற்ற பாடசாலையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகப்பட்டதையடுத்து குறித்த மாணவி வேறு ஒருபாடசாலைக்கு சென்றுள்ளார் எனவும், ஆனால் அங்கு சென்றதன் பின்னர் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் இந்த விடயத்தினை பகிரங்கமாக பேசிய காரணத்தினாலேயே அவமானம் தாங்காது குறித்த மாணவி கடந்த 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார் எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த மாணவி கடந்த ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு நேற்றைய தினமே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது எனவும் இந்த சம்பவம் இடம்பெற்று பல மாதங்கள் கடந்த பின்னரே ஆசிரியருக்கு எதிராக கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் அது தொடர்பாக அறிந்திருக்கவில்லை எனவும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் எனவும், இந்த விவகாரம் தொடர்பாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.