இலங்கை கிரிக்கெட் அணியின் அனுபவம் மிக்க வீரரான அஞ்சலோ மெத்தியூஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பினை அவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், கடந்த 17 வருடங்களாக இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடியது எனது மிக உயர்ந்த மரியாதை மற்றும் பெருமை என்று 37 வயதான வீரர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எனது தொழில் வாழ்க்கை முழுவதும் எனது உயர்ந்த மற்றும் தாழ்ந்த நிலைகளில் எனக்காக இருந்த ஆயிரக்கணக்கான இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றி கூறுகிறேன்.
எதிர்வரும் ஜூன் மாதம் பங்களாதேஷுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி எனது நாட்டிற்காக நான் விளையாடும் இறுதி டெஸ்ட் போட்டியாகும்.
தேர்வுக் குழுவினருடன் கலந்துரையாடியது போல் நான் டெஸ்ட் வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.
எனினும், நாட்டிற்கு தேவைப்பட்டால் வெள்ளை பந்து வடிவ (ஒருநாள், டி20) கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையேடுவேன்.
இந்த டெஸ்ட் அணி திறமையான அணி என்று நான் நம்புகிறேன்.
நம் நாட்டிற்காக பிரகாசிக்க ஒரு இளைய வீரர்களுக்கு வழிவகுக்க இதுவே சிறந்த நேரம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அஞ்சலோ மெத்தியூஸ் 16 சதங்கள், 45 அரைசதங்கள் அடங்கலாக 8,167 ஓட்டங்களை குவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.