வடக்கு கடற்பரப்பில் அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பதற்கு தேசிய செயற்பாட்டுத் திட்டமொன்று தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அழிந்துவரும் மீன்வளங்களை மீள்நிலைக்குக் கொண்டு வரல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன்,
சட்டவிரோத, பதிவு செய்யப்படாத மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத மீன் பிடியைத் தடுத்தல், ஊக்குவிக்காதிருத்தல் தொடர்பாக சர்வதேச செயற்பாட்டுத்திட்டம் உறுப்பு நாடுகளால் கடந்த 2001 ஆம் ஆண்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன் பெறுபேறாக, இலங்கையும் அதற்காக தேசிய செயற்பாட்டுத்திட்டத்தைத் தயாரித்துள்ளது. அத்துடன், பிராந்திய சட்டவிரோத, பதிவு செய்யப்படாத மற்றும்ஒழுங்கு முறைப்படுத்தப்படாத மீன்பிடி தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வங்காளவிரிகுடா வேலைத்திட்டம் நாடுகளுக்கிடையிலான சர்வதேச அமைப்பின் அங்கத்துவ நாடுகள் கூட்டான பிராந்திய செயற்பாட்டுத் திட்டத்தில் கையொப்பமிடுவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறித்த பிராந்திய செயற்பாட்டுத் திட்டத்தில் கையொப்பமிடுவதற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.














