1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியவரும், பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவராகவும் பணியாற்றிய முன்னாள் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் டி.எஸ். டி சில்வா (D.S. de Silva) தனது 83 ஆவது வயதில் காலமானார்.
வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் டி சில்வா, லண்டலில் காலமானதாக அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் மரியாதைக்குரிய நபரான டி சில்வா, டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆரம்ப ஆண்டுகளில் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
மேலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியின் தலைவராகவும் இருந்தார்.
தனது விளையாட்டு வாழ்க்கைக்குப் பின்னர் பயிற்சியாளர், அணி முகாமையாளர் மற்றும் தேசிய தேர்வாளர் உள்ளிட்ட பல பதவிகளில் தொடர்ந்து பணியாற்றினார்.
அவர் 2009 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவராக நியமிக்கப்பட்டு 2011 வரை அந்தப் பதவியில் இருந்தார்.
தனது பதவிக் காலத்தில், நாடு முழுவதும் பல சர்வதேச கிரிக்கெட் மைதானங்களை மேம்படுத்துவதிலும், அவற்றை நிறைவு செய்வதிலும் டி சில்வா முக்கிய பங்கு வகித்தார்.
அவரது மறைவு குறித்து பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிரிக்கெட் வர்ணனையாளர் ரோஷன் அபேசிங்க, டி சில்வாவை மிகவும் மதிக்கப்படும் நிர்வாகி என்றும் ஒழுக்கம் மற்றும் நேர்மைக்கு அவர் பெயர் பெற்றவர் என்று பாராட்டினார்.
“டி.எஸ். என்று பிரபலமாக அறியப்பட்ட அவர், இந்த நாட்டிற்கு பல பதவிகளில் சேவை செய்தார், மேலும் இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். விளையாட்டுக்கு அவர் செய்த சேவைக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்,” என்று கூறினார்.
அத்துடன், டி சில்வாவுடன் நெருக்கமாகப் பணியாற்றியதையும் அபேசிங்க நினைவு கூர்ந்தார், அவரை அன்பானவர், உதவிகரமானவர் மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்காக ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருந்தவர் என்று விவரித்தார்.














