தரமற்ற நிலக்கரி விநியோகத்திற்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து சுமார் 2.1 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய நிலக்கரி இறக்குமதி விவகாரம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக இன்று (28) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தின் நிபுணர்கள் முன்னிலையில் நிலக்கரி மாதிரிகள் பெறப்பட்டு, அவை மேலதிக பரிசோதனைகளுக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இரண்டாவது நிலக்கரி கப்பலின் மாதிரி அறிக்கைகளில் எவ்வித சிக்கல்களும் இல்லை என அவர் கூறினார்.
அத்துடன், மூன்றாவது மற்றும் நான்காவது கப்பல்களிலிருந்து நிலக்கரி இறக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நிலக்கரி எரிப்பு மூலம் உருவாகும் சாம்பலினால் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என உறுதியளிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் கேட்டறிந்ததாகவும், இதன்போது அவர்கள் இது தொடர்பாக தனக்குத் தெளிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நிலக்கரியைப் பயன்படுத்தும் போது இரண்டு வகையான சாம்பல் உருவாகுவதாகவும், அவை பறக்கும் சாம்பல் (Fly ash) மற்றும் அடிச்சாம்பல் (Bottom ash) எனவும், இந்தச் சாம்பல்களால் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.
மேலும், பறக்கும் சாம்பலுக்கு (Fly ash) அதிக கேள்வி நிலவுவதால், அதற்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட இயந்திரங்களைப் பயன்படுத்தி, சூழலுக்குத் திறந்த நிலையில் இல்லாத வகையில் வாடிக்கையாளர்கள் அதனை எடுத்துச் செல்வதை நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, பறக்கும் சாம்பலினால் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.















