கண்டி, பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு (03) மூன்றாவது டி:20 போட்டியில் இங்கிலாந்து அணி இலங்கையை 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்த வெற்றியுடன் இங்கிலாந்து அணியானது சொந்த மைதானத்தில் இலங்கையை 3:0 என்ற கணக்கில் தோற்கடித்து டி:20 தொடரை முழுமையாக கைப்பற்றியது.
போட்டியில் முதலில் துடுப்பாட்டம் செய்ய அழைக்கப்பட்ட இங்கிலாந்து 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
போட்டியில் சாம் கரன் அதிகபட்சமாக 58 ஓட்டங்களை எடுத்து இங்கிலாந்தின் இன்னிங்ஸை நங்கூரமிட்டார்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் துஷ்மந்த சமீர 4 ஓவர்களில் 24 ஓட்டங்களை வழங்கி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
வெற்றி இலக்காக குறைவான ஓட்டங்கள் இருந்த போதிலும் சேஸிங்கில் இலங்கை அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் இறுதியில் அவர்கள் 19.3 ஓவர்களில் 116 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.
இலங்கை அணி சார்பில் குசல் மெண்டீஸ் 26 ஓட்டங்களையும், பத்தும் நிஸ்ஸங்க 23 ஓட்டங்களையும் அதிகபடியாக எடுத்தனர்.
பந்து வீச்சில் இங்கிலாந்து சார்பில் ஜேக்கப் பெத்தேல் 4 விக்கெட்டுகளையும், வில் ஜேக்ஸ் 3 விக்கெட்டுகளையும் அதிகபடியாக எடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாகவும், தொடரின் ஆட்டநாயகனாகவும் சாம் கரன் தெரிவானார்.
2026 ஆம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டி20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு இந்த வெற்றி நம்பிக்கையை அளித்தது.
முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரினை இங்கிலாந்து 2:1 என்ற கணக்கில் வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
















