ஐக்கிய தேசியக் கட்சி ‘ஸ்மார்ட்’ அரசியலுடன் புதிய தலைமுறை ஒன்றை உருவாக்கி வருவதாக கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ‘SMART UNP ‘ டிஜிட்டல் வேலைத்திட்டத்தை நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ரணில் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர்
பிறந்த தலைமுறையைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டிய நேரம்
தற்போது வந்துள்ளது.
அரசியல் கட்சிகளையும் அரசியலையும் அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பதில்
ஐக்கிய தேசியக் கட்சி முன்னின்று செயல்பட வேண்டும்.
மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன,மில்லினியர் தலைமுறையைத் தயார்படுத்தினார்.
நாம் இப்போது ஜென்-ஷீ தலைமுறையிடம் பொறுப்புகளை ஒப்படைக்கத் தயாராக வேண்டும்.
நாம் ஸ்மார்ட் அரசியலை நோக்கி நகர வேண்டும்
அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களை உருவாக்கவேண்டும்
ஜே.ஆர். ஜயவர்தனவின் யுகத்தில் நாம் இல்லை.
நாம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உலகில் வாழ்கிறோம். அதே சமயம்,
ட்ரம்பிற்குச் சவால் விடும் சீனாவின் ஆதிக்கம் நிறைந்த உலகிலும் வாழ்கிறோம்.
எமது அண்டை நாடான இந்தியா ஒரு வல்லரசாக உருவெடுத்து வரும் காலத்திலும், நாம் வாழ்கிறோம்.
இத்தகைய சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ள வேண்டும்.
ஜனநாயக ஆட்சி முறையிலேயே எமது கட்சிகள் முன்னேறியிருக்கின்றன.
அதனை நிலைநிறுத்த சகல சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் . என தெரிவித்தார்.














