இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி மீண்டும் தமிழகம் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பிரசாரம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்துள்ள அண்ணா திராவிர முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசாரத்தையும் தொடங்கியுள்ளது.
கடந்த மாதம் 23 ஆம் திகதி செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பிரசாரத்தை தொடக்கிவைத்தார்.
அப்போது முதலில் மதுரையில் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு பின்னர், மதுராந்தகத்துக்கு கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது.
இந்த நிலையில், பெப்ரவரி 28- ஆம் திகதி மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.












