சர்வதேச ரி20 உலக கிண்ணப் போராட்டிகள் நாளையதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்கப்பொவதில்லை என்ற பாகிஸ்தானின் நிலைப்பாடு தொடர்பாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக பாகிஸ்தான் அணி போட்டியில் பங்கேற்காது என்ற செய்திகளால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த பெருமளவான விடுதி முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த தீடீர் அறிவிப்பு, இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதாரத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டிக்கு நிலவும் பலத்த எதிர்பார்ப்பால் ஏற்கனவே அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே பாகிஸ்தானின் இந்த நிலைப்பாடு இலங்கைக்கு பாரிய பின்னடைவாகும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை மோசமாக இருந்த காலங்களிலும், ஏனைய நாடுகள் அங்கு செல்லத் தயங்கிய போதும், இலங்கை அணி பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடியதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை நினைவூட்டியுள்ளது.
அன்று இலங்கை காட்டிய அதே விளையாட்டுப் பண்பையும், ஒத்துழைப்பையும் தற்பொது பாகிஸ்தானிடம் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கமும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனமும் இணைந்து அனைத்து அணிகளுக்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு, நடுநிலைமை மற்றும் தொழில்முறை வசதிகளை வழங்கும் என பாகிஸ்தானுக்கு முழுமையான உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களின் நலன் கருதி, போட்டியைப் புறக்கணிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பாகிஸ்தானிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


















